திருப்பத்தூர்: கை தொடும் உயரத்தில் மின் கம்பி; பயத்தில் கிராம மக்கள்! – கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் அல்ராஜ் வட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இங்குள்ள குடியிருப்பு பகுதியில் தொட்டுவிடும் உயரத்தில் மின்கம்பிகள் செல்கின்றன. தற்போது மழை பெய்து வருவதால், அதிக காற்று வீசும்போது மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தீப்பொறி ஏற்படுகிறது. மேலும், இங்கு அதிகளவில் பள்ளி மாணவர்கள் இருப்பதால், கிராம மக்களும், பெற்றோரும் எதாவது விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, “இந்த நிலைமை கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாக நீடித்து வருகிறது. இதற்குக் காரணம், பழைய மின்கம்பங்கள் தான். அவை எல்லாம் சிமெண்ட் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளன. மற்றும், அந்த கம்பம் மிகவும் தாழ்வாக உள்ளது.

மின்கம்பிகள் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பதால், நிலத்திலிருந்து நெல் மூட்டைகளைத் தலையில் தூக்கிச் செல்லும்போது மின்சாரம் பாய்ந்து உயிருக்கு எதாவது நேர்ந்து விடுமோ என்ற அச்சம் ஒருபக்கம்… பயிர் செய்வதற்கு இழுவை இயந்திரம் மூலம் ஏர் உழுவதற்குச் செல்ல முடியாத அவல நிலை மறுபக்கம்… போதாததற்கு, எங்கள் ஊர் பிள்ளைகள் கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுகள் விளையாட இந்தப் பக்கம் சுற்றித் திரிவார்கள். இப்படி, எல்லா பயத்தையும் வைத்து, நாள்தோறும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பிழைப்பு நடத்துகிறோம்.

இது தொடர்பாக, எங்கள் பகுதி மக்களும், விவசாயிகளும் ஒன்று திரண்டு மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் மட்டுமே காட்டி வருகின்றனர்.

எங்கள் உயிர்களுடன் விளையாடாமல், அதிகாரிகள் விரைந்து தாழ்வாக உள்ள மின்கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும் அல்லது புதிய மின்கம்பம் நட்டு உயரத்தில் மின்கம்பிகள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மின்சார வாரியத்திற்குச் சென்று விளக்கம் கேட்டபோது, “அந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்று விரைந்து இதற்குரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்கிறோம்” என்றனர்.

இந்த விஷயத்தில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா, இல்லையா என்று சற்று பொறுத்திருந்து பார்ப்போம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.