திருமணமாகி கணவரை பிரிந்திருக்கும் பெண்கள் சில நேரங்களில் தங்களது ஆண் நண்பர் தங்களை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக குற்றம் சாட்டுவதுண்டு. இது போன்ற குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்ககளில் நிற்பதில்லை.
மகாராஷ்டிரா மாநிலம் சதாராவைச் சேர்ந்த முஸ்கான் என்ற பெண்ணுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பெற்றோர் வீட்டில் வந்து தங்கி இருந்தார்.
அந்நேரம் அவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் 23 வயது பி.எஸ்.சி படிக்கும் மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது. இப்பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் உறவு வைத்துக்கொண்டனர். ஆனால் இப்போது அந்த மாணவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறி அப்பெண் போலீஸில் புகார் செய்துள்ளார்.

இது தொடர்பாக அப்பெண் கொடுத்துள்ள புகாரில், 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து 2023-ம் ஆண்டு ஜூலை வரை 23 வயது வாலிபர் தன்னுடன் உறவு வைத்துக்கொண்டார். அதோடு தனக்கு (மனுதாரர்) விவாகரத்து கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தையும் கூறினார்.
2022-ம் ஆண்டு ஜூலை மாதம் விவாகரத்து கிடைத்துவிட்டது. ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து மாணவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மாணவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மாணவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனு நீதிபதிகள் நாகரத்னா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இம்மனு மீதான விசாரணையின் போது, பெண் தரப்பில் தெரிவித்த வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்தில், ”தனது விருப்பம் இல்லாமல் மாணவர் உறவு வைத்துக்கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு ஆண்டாக உறவு குறித்து வெளியில் சொல்லவில்லை. அதோடு மாணவருடன் ஓரிரு முறை லாட்ஜிக்கும் சென்று வந்துள்ளார். எனவே அவரது குற்றச்சாட்டு நம்பும்படியாக இல்லை. மாணவருடன் உறவு வைத்துக்கொண்ட போது சம்பந்தப்பட்ட பெண் திருமண உறவில்தான் இருந்துள்ளார்.
திருமண உறவில் இருக்கும் போது திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்துக்கொள்வது சட்டவிரோதமானது. திருமணமான, நான்கு வயது குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண் தொடர்ந்து ஏமாற்றப்படுவதற்கோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்த ஒருவருடன் நீண்டகால தொடர்பை பேணுவதற்கோ எந்த நியாயமான சாத்தியமும் இல்லை” என்று கூறி மாணவர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.