புதுடெல்லி: இந்தியா நீரோட்டத்தை கட்டுப்படுத்தியதன் காரணமாக செனாப் நதி நீர் வரத்து திடீரென குறைந்துள்ளது. இதனால், பாகிஸ்தானில் உள்ள அணைகள் வேகமாக வறண்டு வருகின்றன. பாகிஸ்தான் விவசாயிகளின் பயிர் விதைப்பு பணிகளில் இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் இரண்டு முக்கிய அணைகளாக ஜீலம் நதியின் குறுக்கே உள்ள மங்களா மற்றும் சிந்து நதியின் குறுக்கே உள்ள தர்பேலா ஆகியவை உள்ளன. இந்த அணைகளில் உள்ள நீரின் அளவு வேகமாக குறைந்து அணைகள் வறண்டு வருகின்றன. இதற்கு, பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக செனாப் நீர் வரத்தை கட்டுப்படுத்த இந்தியா எடுத்த நடவடிக்கை முக்கிய காரணமானது.
அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாதது மே-செப்டம்பர் மாதங்களில் கோடை விதைப்பு பணிகளுக்கு நீர் கிடைப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். அத்துடன் இந்த மாதம் காரீப் பருவத்தின் ஆரம்ப விதைப்பு பணிகள் மேலும் மோசமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், ஒட்டுமொத்த நீர்வரத்தில் 21 சதவீதம் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
செனாப் நதியில் இந்தியா நீரோட்டத்தை கட்டுப்படுத்தியதை கருத்தில் கொண்டு அணையிலிருந்து வரும் நீரை சிக்கனமாக பயன்படுத்த அணை அதிகாரிகள் மற்றும் நீர்ப்பாசன விநியோக கண்காணிப்பு நிறுவனங்களை பாகிஸ்தான் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.
நீர்ப்பிடிப்புப் பகுதியில் பருவமழை பெய்யும் போது நிலைமை மேம்படக்கூடும். என்றாலும், அடுத்த மாதத்திற்குள் பாகிஸ்தானின் விவசாய நடவடிக்கைகள் பெருமளவு, செனாப் நதியில் உள்ள அதன் சொந்த நீர்த்தேக்கங்களான பாக்லிஹார் மற்றும் சலால் ஆகியவற்றை நம்பியே உள்ளது. செனாப் நதியின் நீர்வரத்து திடீரென குறைவது காரீப் பருவத்தின் சாகுபடியை பெரிதும் பாதிக்கும் என்று அந்த ஆணையம் கவலையுடன் குறிப்பிட்டுள்ளது.