சென்னை: பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வாழ்க்கைத் துணைவரின் பெயரை சேர்க்க அல்லது நீக்க விண்ணப்பதாரர்கள் `இணைப்பு ஜே’ என்ற பிரமாணப் பத்திரத்தைப் பயன்படுத்தலாம்.
இதுகுறித்து பாஸ்பார்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வேலை, படிப்பு, சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பல லட்சம் மக்கள் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். பாஸ்போர்ட் பெறுவதில் சில விதிமுறைகளை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டுவந்தது.
இந்நிலையில், பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் முக்கிய சீர்திருத்தத்தை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. அதில், வாழ்க்கைத் துணைவரின் பெயரை பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் சேர்க்க அல்லது நீக்க விண்ணப்பதாரர்கள் திருமணச் சான்றிதழுக்கு மாற்றாக `இணைப்பு ஜே’ (Annexure J) எனப்படும் எளிமையான பிரமாணப் பத்திரத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை, விண்ணப்ப செயல்முறையை நெறிப்படுத்துவதையும் தாமதங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. `இணைப்பு ஜே’ என்பது எளிமைப்படுத்தப்பட்ட பிரமாணப் பத்திரமாகும், இதில் விண்ணப்பதாரர்கள் தங்கள் திருமண நிலையை முறையாக அறிவித்து, பாஸ்போர்ட்டில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சேர்க்க (அல்லது நீக்க) கூட்டாகக் கோருகின்றனர். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த சீர்திருத்தத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா இணையதளத்தைப் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.