பிரம்மபுத்திரா நதி நீரை சீனா நிறுத்தினால் என்ன நடக்கும்? – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா விளக்கம்

குவாஹாட்டி: பிரம்மபுத்திரா நதி நீரை சீனா நிறுத்தினால் என்னாகும் என்னும் பாகிஸ்தானின் அச்சுறுத்தலைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவப் படைகள் அழித்தன. மேலும், பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளபோதும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததை இந்தியா நீட்டித்துள்ளது.

இந்நிலையில், “பாகிஸ்தான் செல்லும் சிந்து நதி நீரை, இந்தியா நிறுத்தியுள்ளது. அதைப் போலவே, சீனாவிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் பிரம்மபுத்திரா நதி நீரை சீனா நிறுத்தினால் என்னாகும்” என்று பாகிஸ்தான் எச்சரிக்கை செய்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இதற்கு அசாம் மாநிலம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று நீண்ட விளக்கம் அளித்துள்ளார். அவர் அதில் கூறியுள்ளதாவது: பிரம்மபுத்திரா நதி விவகாரம் தொடர்பாக ஆதாரமில்லாத தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்தியாவுக்கு வரும் பிரம்மபுத்திரா நதி நீரைச் சீனா நிறுத்தினால் என்ன செய்ய முடியும்? என்று இந்தியாவை அச்சுறுத்துவதற்காக பாகிஸ்தான் இதுபோன்ற தகவலைப் பரப்பி வருகிறது. காலாவதியான சிந்து நதி நீர் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகிய பிறகு, பாகிஸ்தான் இப்போது மற்றொரு கற்பனையான அச்சுறுத்தலைப் பரப்பி வருகிறது.

சரி, இந்தியாவுக்கு வரும் பிரம்மபுத்திரா நதி நீரைச் சீன நாடு நிறுத்தினால் நாம் என்ன செய்வது? இந்த கட்டுக்கதைக்கான பதிலை நாம் தேசிய தெளிவுடன் பார்க்க வேண்டும்.

இந்தியாவுக்குள் நுழையும் போது சிறிய அளவில் இருக்கும் பிரம்மபுத்திரா ஆறு, பின்னர் பெரிய அளவிலாக மாறுகிறது. இது இந்தியாவில் சுருங்காது.. வளரவே செய்கிறது. பிரம்மபுத்திராவின் மொத்த நீர்வரத்தில் சீனாவின் பங்களிப்பு 30 சதவீதம் முதல் 35 சதவீதம் மட்டுமே இருக்கிறது. அதுவும் பெரும்பாலும் பனிப்பாறை உருகுதல் மற்றும் திபெத் நாட்டில் பெய்யும் மழைப்பொழிவு மூலம் மட்டுமே அது நடக்கிறது.

மீதமுள்ள 65 சதவீதம் முதல் 70 சதவீத நதி நீர் இந்தியாவுக்குள்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அருணாச்சல பிரதேசம், அசாம், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பெய்யும் பருவமழைதான் இதற்குக் காரணம். இதனால்தான் பிரம்மபுத்திரா மிகப்பெரிய நதியாக இந்தியாவில் உருமாறுகிறது. அதுமட்டுமல்லாமல், சுபன்சிரி, லோஹித், கமெங், மனாஸ், தன்சிரி, ஜியா-பராலி, கோபிலி போன்ற முக்கிய துணை நதிகளும் பிரம்மபுத்திராவுடன் இணைவதால் அது பலமடங்கு பெருக்கெடுத்து ஓடுகிறது.

காசி, காரோ மற்றும் ஜெயந்தியா மலைகளிலிருந்து கிருஷ்ணாய், திகாரு மற்றும் குல்சி போன்ற ஆறுகள் வழியாகவும் கூடுதல் நீர்வரத்து கிடைக்கிறது. இந்திய-சீன எல்லையில் பிரம்மபுத்திரா நதி நுழையும்போது விநாடிக்கு 2 ஆயிரம் கனமீட்டர் முதல் 3 ஆயிரம் கன மீட்டராக இருக்கும்.

அதேநேரம் அசாம் சமவெளிகளில் (குவாஹாட்டி போன்ற இடங்களில்) மழைக் காலங்களில் பிரம்மபுத்திராவில் நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கனமீட்டர் முதல் 20 ஆயிரம் கன மீட்டராக அதிகரித்து இருக்கும். அதாவது, பிரம்மபுத்திரா நதி என்பது சீனாவில் இருந்து வரும் நீரைச் சார்ந்து இருக்கும் நதி அல்ல. அது மழையால் இயங்கும் இந்திய நதி அமைப்பு, இந்திய எல்லைக்குள் நுழைந்த பிறகு பிரம்மபுத்திரா மேலும் பலமானதாகவும், பெரிதாகவும் மாறுகிறது. அதுதான் உண்மை.

ஒருவேளை, இந்தியாவுக்கு வரும் நீரை, சீன நாடு குறைத்தால் கூட அது உண்மையில், அசாமில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உதவவே செய்யும். இந்த வெள்ளம் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை இடம்பெயர வைக்கிறது. அதைக் கட்டுப்படுத்தலாம்.

இதற்கிடையில், சிந்து நீர் ஒப்பந்தத்தின் கீழ் 74 ஆண்டுகளாகப் பலனைப் பெற்று வந்த பாகிஸ்தான், இப்போது இந்தியா தனது இறையாண்மை உரிமைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால் பீதி அடைந்துள்ளது. ஒரு விஷயத்தைப் பாகிஸ்தான் நாடு மறந்துவிடக்கூடாது. பிரம்மபுத்திரா என்பது ஒரே ஒரு இடம் மூலம் கட்டுப்படுத்தப்படவில்லை. அது நமது இந்தியாவின் புவியியல், நமது பருவமழை, துணை ஆறுகள் ஆகியவை மூலமே இயக்கப்படுகிறது என்பதே உண்மை. இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.