ஜபுவா: மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் சிமென்ட் ஏற்றப்பட்ட லாரி, வேன் மீது கவிழ்ந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், இரண்டு பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜபுவா மாவட்டத்தின் மேக்நகர் தாலுகாவுக்கு உட்பட்ட சஞ்சேலி எனும் இடத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
பாவ்புரா என்ற பகுதியில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர், ஷிவ்கர் மஹுதா என்ற தங்கள் கிராமத்துக்கு வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளனர். அவர்கள் வேன், அதிகாலை 2.30 மணி அளவில் சஞ்சேலி ரயில் மேம்பாலம் அருகே வந்தபோது, மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த சிமெண்ட் ஏற்றப்பட்ட லாரி கவிழ்ந்து வேன் மீது விழுந்துள்ளது. இதில், வேனில் பயணித்த 11 பேரில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் ஐந்து பேர் சிறுவர்கள். ஜபுவா காவல் கண்காணிப்பாளர் பத்மவிலோச்சன் சுக்லா இதனை தெரிவித்துள்ளார்.
இறந்தவர்கள் முகேஷ் கபேத் (40), சவ்லி கபேத் (35), வினோத் கபேத் (16), பயல் கபேத் (12), மதி பமானியா (38), விஜய் பமானியா (14), காந்தா பமானியா (14), ராகினி (9) மற்றும் அக்லி பர்மர் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜபுவா காவல் கண்காணிப்பாளர், உடல்கள் பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காகவும் தாண்ட்லா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார்.
விபத்தை அடுத்து லாரி ஓட்டுநர் தலைமறைவாகிவிட்ட நிலையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஜபுவா காவல் கண்காணிப்பாளர் பத்மவிலோச்சன் சுக்லா கூறியுள்ளார்.