வாஷிங்டன்: பயங்கரவாத பிரச்சினையில் உலகளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடன் சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உதவ வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தியாவுடனான சிக்கல்களை தணிப்பதில் ட்ரம்பின் பங்கைப் பாராட்டினார். மேலும், அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உரையாடலை ஊக்குவிப்பதில் அமெரிக்கா மிகவும் தீவிரமான பங்கை வகிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான விரோதப் போக்கை நிறுத்துவதற்கு உதவியதற்காக ட்ரம்ப் “புகழ் பெறத் தகுதியானவர்” என்று முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறியதை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் எதிரொலித்தார்.
முன்னதாக பிலாவல் பூட்டோ வெளியிட்ட கருத்தில், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை எளிதாக்கியதற்காக 10 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் டொனால்ட் ட்ரம்ப் பெருமை சேர்த்துள்ளார். போர் நிறுத்தத்தை சாத்தியமாக்க உதவியது அவரது முயற்சிகள் என்பதால் அவருக்கு அந்தப் பெருமை உரியது. எனவே, இந்தப் போர் நிறுத்தத்தைப் பேணுவதில் பாகிஸ்தானுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருந்தால், ஒரு விரிவான உரையாடலை ஏற்பாடு செய்வதில் அமெரிக்காவின் பங்கு நமக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமானது” என்று அவர் கூறினார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என இந்தியா பகிரங்கமாக மறுத்து வருகிறது. மேலும், இருதரப்பு பிரச்சினைகளில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தையும் இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
இதுகுறித்து பேசிய அமெரிக்காவிற்கான அனைத்துக் கட்சிக் குழுவை வழிநடத்தும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், “எங்கள் தலையில் துப்பாக்கியை நீட்டி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்ற தெளிவான நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது என்பதை அமெரிக்கா புரிந்துகொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். பாகிஸ்தான் தூதுக்குழு நாங்களும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. அது யாருடைய தவறு?. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹிலாரி கிளிண்டன் கூறியது போல். உங்கள் கொல்லைப்புறத்தில் விரியன் பாம்புகளை வளர்த்து, அவை உங்கள் அண்டை வீட்டாரை மட்டுமே கடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது” என்று கூறினார்.