உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டதை ஒட்டி ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பசுமை காக்க “தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம்” பிரச்சாரத்தையும் பிரதமர் முன்னெடுத்தார்.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (யுஎன்இபி) கீழ் 1973 முதல் ஆண்டுதோறும் ஜூன் 5 -ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதற்கு இந்தநாள் மிகப்பெரிய தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி, பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் மரக்கன்று நடும் இயக்கத்தில் கலந்து கொண்டு மரக்கன்று ஒன்றை நட்டார். மேலும், ஆரவல்லி பசுமைச் சுவர் திட்டத்தின் கீழ் ஆரவல்லி மலைத்தொடரில் காடுகளை மறுசீரமைத்து வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் கூறியுள்ளதாவது: உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்று ஆரவல்லி மலைத்தொடர். குஜராத் முதல் ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி வரை இந்த மலைத்தொடர் பரந்துவிரிந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த மலைத்தொடர் பல்வேறு சுற்றுச்சூழல் சவால்களை உருவாக்கியுள்ளது. அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் ஆரவல்லியில் 700 கி.மீ. தூரத்துக்கு காடுகளை மறுஉருவாக்கம் செய்யும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த மலைத்தொடருடன் இணைக்கப்பட்ட பகுதிகளை புத்துயிர் பெற செய்வதே எங்களின் முக்கிய நோக்கம். இதற்காக அந்தந்த உள்ளூர் நிர்வாகங்களுடன் இணைந்து பணியாற்ற போகிறோம். அப்போது, நீர் அமைப்புகளை மேம்படுத்துவது, புழுதி புயல்களை தடுப்பது, தார் பாலைவனம் கிழக்கு நோக்கி விரிவடைவதை தடுப்பது போன்ற விஷயங்களை அவர்களிடம் வலியுறுத்துவோம்.

உலக சுற்றுச்சூழல் தினத்தில், நமது கிரகத்தைப் பாதுகாப்பதற்கும், நாம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்குமான நமது முயற்சிகளை ஆழப்படுத்துவோம். நமது சுற்றுச்சூழலை பசுமையாகவும் சிறப்பாகவும் மாற்ற அடிமட்டத்தில் பாடுபடும் அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “தாயின் பெயரில் ஒரு மரத்தை நடுவோம்” என்ற பிரச்சாரத்தையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இந்த இயக்கத்தில் இளைஞர்கள் அதிகமாக பங்கேற்க அவர் அழைப்புவிடுத்தார். பசுமைப் பயணத்தை ஊக்குவிக்க டெல்லி அரசின் மின்சார பேருந்து சேவைகளையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது, டெல்லி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று கூறினார்.

ஆரவல்லி பசுமைச் சுவர் திட்டம் என்பது மூன்று மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தின் 29 மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் பசுமைப் போர்வையை விரிவுபடுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.

ஆரவல்லி மலைத்தொடரில் மொத்த காடுகள் அழிக்கப்பட்டதில் 81 சதவீதம் ராஜஸ்தானையும், 15.8 சதவீதம் குஜராத்தையும், 1.7 சதவீதம் ஹரியானாவையும், 1.5 சதவீதம் டெல்லியையும் சேர்ந்தவை.

மறு காடு வளர்ப்பு மற்றும் நீர்நிலைகளை மீட்டெடுப்பதன் மூலம் ஆரவல்லியில் பல்லுயிர் பெருக்கம் மேம்படும் என்பதுடன் இது அப்பகுதியில் மண் வளத்தையும் நீர் இருப்பின் தன்மையையும் மேம்படுத்த உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.