புதுடெல்லி: வெறுப்புப் பேச்சு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றதால், உத்தரப் பிரதேச எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் குற்றவாளியாக இருந்து அரசியலுக்கு வந்த முக்தார் அன்சாரியின் மகன் ஆவார். இவருக்கு ஜாமீன் கிடைத்தும் அதன் பலன் கிடைக்கவில்லை.
உத்தரப் பிரதேசத்தின் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி) சார்பில் மாவ் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அப்பாஸ் அன்சாரி. குற்றவாளிகள் பட்டியலில் இருந்த இவர் அரசியல்வாதியாக மாறினார்.
முன்னாள் எம்எல்ஏவான இவரது தந்தையான முக்தார் அன்சாரியும் உ.பி.யின் பிரபலக் குற்றவாளியாக இருந்தவர். கடந்த 2022 உபி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வென்றிருந்தார்.
இந்நிலையில் அப்பாஸ் அன்சாரி, மார்ச், 3, 2022 இல் பஹர்பூர் மைதானப் பிரச்சாரத்தில் பேசுகையில், ‘இங்குள்ள அதிகாரிகளைப் பழிக்கு பழிவாங்கி அவர்களுக்கு பாடம் புகட்டுவேன்’ என மிரட்டியிருந்தார். இதனால், அப்பாஸ் மீது அரசு அதிகாரிகளை மிரட்டியதற்காக ஐபிசி 189, மதம் உள்ளிட்டவையின் அடிப்படையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் உருவாக்கும் ஐபிசி 153-ஏ மற்றும் 171 எப், 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவானது.
இது, உபி.யின் எம்பி, எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை வெளியான இதன் தீர்ப்பில் இரண்டு வருடம் தண்டனை வழங்கப்பட்டது.
இத்துடன், மேல்முறையீட்டு மனு செய்ய ஜாமீனும் அன்சாரிக்கு கிடைத்தது. எனினும், தீர்ப்பு வெளியான 24 மணி நேரத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் சட்டப்பேரவை அலுவலகம் திறக்கப்பட்டு விரைவாக செயல்பட்டது.
இதன் விளைவாக அப்பாஸ் அன்சாரி பதவி நீக்கம் செய்யப்பட்டு அவரது தொகுதி காலியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு விட்டது. இதனிடையே தனக்கு கிடைத்த ஜாமீன் தகவலையும் அப்பாஸ் அன்சாரியால் சட்டப்பேரவைக்கு சமர்ப்பிக்க முடியவில்லை.
இதன் காரணமாக, அப்பாஸ் அன்சாரிக்கு ஜாமீன் கிடைத்தும் பலன் இல்லாமல் போய் உள்ளது. இந்த நடவடிக்கை, சட்டப்பூர்வ ஓட்டைகளைத் தவிர்க்க மாநில அரசு அவசரமாகச் செயல்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
அப்பாஸ் திங்களன்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தனது தண்டனைக்கு இடைக்கால தடை விதித்திருந்ததால், சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்க முடியாது. வார இறுதி நாளான சனிக்கிழமையில் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்ததன் மூலம், தகுதி நீக்கம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு அத்தகைய நிவாரணம் கோர முடியாது என்பது விதியாக உள்ளது.
எனவே, உபியின் மாவ் தொகுதிக்கு மத்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரவிருக்கும் பிஹார் தேர்தலுக்கு முன்பு இடைத்தேர்தலை நடத்த மாநில அரசு தயாராக உள்ளது. சில நாட்களுக்குள் இதன் அறிவிப்பு வெளியானால் அத்துடன் இடைத்தேர்தலுக்கும் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.