நடிகர் ரஜினிகாந்த் தமிழகமெங்கும் முழுக்க இருக்கும் தன்னுடைய ரசிகர்களின் பிள்ளைகளின் உயர்படிப்புக்கு சத்தமில்லாமல் ஒவ்வொரு வருடமும் உதவி செய்து வருகிறார். பிளஸ் டூ தேர்வில் 85 சதவிகிதத்துக்கு மேல் எடுத்திருக்கும் ரஜினி ரசிகர்களின் பிள்ளைகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனவாம். உதவி என்றால் கல்லூரிப் படிப்பென்றால் படிப்பு முடிகிற வரை ஒவ்வொரு ஆண்டும் முழுக் கட்டணத்தையும் பவுன்டேஷனிலிருந்தே நேரடியாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு கட்டி விடுகின்றனர்.
கலை, அறிவியல், தொடங்கி பொறியியல் மருத்துவம் வரை எந்தப் படிப்பாக இருந்தாலும் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனவாம்.

இந்த உதவியைப் பெற சம்பந்தப்பட்ட ரசிகர் ரஜினி மன்றத்தில் இருந்தார், இருக்கிறார் என்பதற்கான ஆதாரம், பிள்ளைகளின் மதிப்பெண் பட்டியல் மற்றும் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர்ந்ததற்கான சான்று, கட்டண விபரம் ஆகியவற்றை இணைத்து பவுன்டேஷனுக்கு அனுப்பி விட்டால் போதும்.
அங்கிருந்து அதை செக் செய்து சரியாக இருக்கும் பட்சத்தில் உதவித் தொகையானது உடனடியாக அனுப்பப் பட்டு விடுகிறதாம்.
இந்தாண்டு சென்னை சிவலிங்கபுரம் ரவி தனது பேத்திக்கு இந்த உதவித் தொகையை வாங்கியிருக்கிறார். சென்னையில் படித்து வரும் செஞ்சி அன்வரின் மகன் சையத் சல்மானுக்கு பொறியியல் இரண்டாமாண்டுக்கான கட்டணம் கட்டப்பட்டுள்ளதாம்.
‘கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் உட்பட சில மாவட்டங்கள்ல இருந்து இந்தாண்டு விண்ணப்பிச்சிருந்தவங்களுக்கெலாம் கட்டணம் கட்டப்பட்டு விட்டதா தகவல் வந்திருக்கு. கல்லூரிகள்ல கட்டணம் கட்டின உடனேயே வீட்டுக்கும் தகவல் தெரிவிச்சிடுவாங்க. தமிழ்நாடு முழுக்கவே கடந்த சில வருஷங்களா சத்தமில்லாம இந்த உதவிகளைச் செஞ்சிட்டு வர்றாங்க. இதப் பத்தி விளம்பரமும் பண்ணக் கூடாதுனு சொல்லிடுறாங்க.

இது பத்தி ஒரு தடவை நாங்க கேட்டதுக்கு ரசிகர்களுக்குச் செய்ய வேண்டியதைத் தன்னுடைய கடமையா நினைக்கிறார் தலைவர். அதனால அதைப் போட்டோ பிடிச்சு செய்தியாக்கறதையெல்லாம் அவர் விரும்பலை.
உதவியடைஞ்ச சிலர்தான் திட்டு வாங்கினாலும் பரவாயில்லன்னுட்டு அப்பப்ப இது பத்தி வெளியில சொல்வாங்க.
நாங்க கூட இதை எதுக்குச் சொல்றோம்னா எங்க ரசிகர்கள்லயே சிலருக்கு இதுபத்தி தெரியாம இருக்கு. அவங்களுக்குத் தெரியட்டுமேனுதால் இதுபத்திப் பேசறோம்’ என்கிறார் சென்னை விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் சாதிக் பாட்ஷா.