How to Check for Fake SIM Cards : போலி SIM கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகள் நாட்டில் அதிகரித்து வருகிறது. இது சைபர் கிரைம் ஆகும். எனவே, மொபைல் சிம் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். உங்கள் பெயரில் மோசடி மூலம் SIM வாங்கப்பட்டு, அது தவறாக பயன்படுத்தப்பட்டால், உங்களுக்கு சட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, உங்கள் பெயரில் எத்தனை SIM கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். ஒரு நபரின் பெயரில் அதிகபட்சம் 9 மொபைல் SIM கார்டுகள் மட்டுமே செயல்படுத்தப்படலாம். இந்த வரம்பை மீறினால், ரூ. 50,000 முதல் ரூ. 2,00,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுதவிர சில கடுமையான சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.
ஒருவேளை உங்கள் பெயரில் போலி சிம் கார்டு உள்ளதா என்பதை நீங்கள் சரிபார்க்க விரும்பினால் நீங்கள் எங்கும் சென்று அலைய தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே வெறும் ஒரு நிமிடத்தில் உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் ஆக்டிவாக உள்ளன, போலியாக யாரேனும் சிம் கார்டு வாங்கி பயன்படுத்துகிறார்களா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் பெயரில் எத்தனை SIM கார்டுகள் உள்ளன? – சரிபார்ப்பது எப்படி?
* நீங்கள் https://tafcop.dgtelecom.gov.in என்ற வலைதளத்துக்கு செல்லவும்
* உங்கள் 10-இலக்க மொபைல் எண்ணை உள்ளிட்டு, “Request OTP” கிளிக் செய்யவும்.
* உங்கள் மொபைலுக்கு OTP வரும்; அதை வலைத்தளத்தில் உள்ளிடவும்.
* உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மொபைல் எண்களின் பட்டியல் திரையில் காட்டப்படும்.
தெரியாத எண் இருந்தால் என்ன செய்வது?
* “This is not my number” என்பதை கிளிக் செய்து ரிப்போர்ட் செய்யவும்.
* DoT (Department of Telecommunications) அந்த எண்ணை விசாரித்து, தேவையான நடவடிக்கை எடுக்கும்.
* ரிப்போர்ட் செய்த பிறகு, உங்களுக்கு ஒரு Reference ID (Ticket Number) கிடைக்கும்.
* இந்த ID-ஐ பயன்படுத்தி அடுத்தகட்ட வழிமுறைகளுக்கு பாலோ செய்து கொள்ளுங்கள்
* போலியான சிம் கார்டு கண்டுபிடிக்கப்பட்டால் உங்களின் புகார் அடிப்படையில் அந்த எண் டீ-ஆக்டிவேட் செய்யப்படும் அல்லது உங்கள் ஆதார்/ID-லிருந்து நீக்கப்படும்.
விதிகள் என்ன சொல்கின்றன?
* பொதுவாக, ஒரு நபரின் ID-க்கு அதிகபட்சம் 9 SIM கார்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
* ஜம்மு-காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், ஒரு நபருக்கு 6 SIM கார்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
* உங்கள் ID-ல் மோசடி மூலம் SIM செயல்படுத்தப்பட்டு, அது தவறாக பயன்படுத்தப்பட்டால், உங்களுக்கு சட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்!
பாதுகாப்பு நடவடிக்கைகள்
* உங்கள் ஆதார்/ID-யை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
* தெரியாத நபர்களுக்கு உங்கள் ஆவணங்களை கொடுக்க வேண்டாம்.
* உங்கள் பெயரில் போலி SIM உள்ளதா என்பதை அவ்வப்போது சரிபார்க்கவும்.