ஓய்வை அறிவித்த இந்தியாவின் 'சுட்டிக் குழந்தை' – விராட் கோலியை விட இளையவர்!

Piyush Chawla Retirement: இந்திய கிரிக்கெட்டில் சுமார் கடந்த 20 ஆண்டுகளாக விளையாடி வந்தவர் பியூஷ் சாவ்லா. கடந்தாண்டு வரை இவர் ஐபிஎல் தொடரிலும் விளையாடி வந்தார். 36 வயதான இவர் இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகள், 25 ஒருநாள் போட்டிகள் மற்றும் 7 டி20ஐ போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் கடைசியாக இந்திய அணிக்கு 2014ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடியிருந்தார்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் கடைசியாக இவர் 2024-25 சீசனின் சையத் முஷ்டாக் அலி டிராபி கோப்பையில் விளையாடியிருந்தார். மேலும், 2025 மெகா ஏலத்திலும் இவர் தனது பெயரை பதிவு செயது வைததிருந்தார். ஆனால், அவருக்கு எந்த அணியும் வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அவர் வர்ணனையாளராக இருந்து வந்தார். பல்வேறு போட்டிகளிலும் அவர் வர்ணனையாளராக இருந்தார். 

பியூஷ் சாவ்லா 192 போட்டிகளில் அதுவும் நான்கு அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ் (PBKS), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), மும்பை இந்தியன்ஸ் (MI) அணியில் இவர் விளையாடியிருக்கிறார். 191 இன்னிங்ஸில் இவர் 192 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இவர் சுனில் நரைன் உடன் இணைந்து 3வது இடத்தை பிடித்துள்ளார். யுஸ்வேந்திர சஹால் 221 விக்கெட்டுகள், புவனேஷ்வர் குமார் 198 விக்கெட்டுகள் உடன் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

இவர் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற சேலஞ்சர் டிராபி தொடரில் சச்சினுக்கு அருமையான கூக்ளி பந்தை வீசி அவரை 22(22) ரன்களில் ஆட்டமிழக்க வைத்ததன் மூலம் மிகவும் புகழ்பெற்றார். அப்போது அவருக்கு வயது வெறும் 16 தான். இளம் வயதில் இருந்தே அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 2006ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான மொஹாலி டெஸ்டில் இவர் அறிமுகமானார். அதன்பின் ரோஹித் சர்மா, புஜாரா, ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றார். 2007ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை இவர் உச்சத்தில் இருந்தார். 

2007 டி20 உலகக் கோப்பை இந்திய அணியிலும், 2008இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஓடிஐ தொடரை வென்ற இந்திய அணியிலும், 2011 ஐசிசி உலகக் கோப்பை இந்திய அணியிலும் இவர் இடம்பெற்றிருந்தார். உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட அணிகளுக்கு 137 முதல் தர போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 446 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 

பியூஷ் சாவ்லா அவரது ஓய்வு குறித்து இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவில், “இந்தியாவை மிக உயர்ந்த இடத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியதில் இருந்து 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணிகளில் ஒரு பகுதியாக இருந்தது வரை, இந்த நம்பமுடியாத பயணத்தின் ஒவ்வொரு தருணமும் ஆசீர்வதிக்கப்பட்டது. 

இந்த நினைவுகள் என்றென்றும் என் இதயத்தில் பதிந்திருக்கும். நான் களத்தில் இருந்து விலகிச் சென்றாலும், கிரிக்கெட் எப்போதும் என்னுடன் வாழும், இந்த அழகான விளையாட்டின் பாடங்களையும் உணர்வையும் சுமந்துகொண்டு ஒரு புதிய பயணத்தைத் தொடங்க நான் இப்போது ஆவலுடன் காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.