ஆட்டோவை வழி மறித்து பெண் வெட்டிக்கொலை; 2 ஆண்டுக்குப் பிறகு கொலையாளிகள் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஜமீன் தேவர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் மனைவி வெள்ளைத் துரைச்சி. இவர்,  கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி இரவு குமரெட்டியாபுரத்தில் இருந்து கட்டாரங்குளத்திற்கு சண்முகராஜ் என்பவரது ஆட்டோவில் பயணம் செய்தார். காளம்பட்டி ரோட்டில் ஆட்டோ வழிமறிக்கப்பட்டு மர்ம நபர்களால் வெள்ளத்துரைச்சி சரமாரியாக வெட்டப்பட்டார். தடுக்க முயன்ற ‌ஆட்டோ ஓட்டுநர் சண்முகராஜூக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெள்ளத்துரைச்சி உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்டவர்கள்

பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் சண்முகராஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்தார். இதுதொடர்பாக நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் சண்முகராஜூவிற்கும், வெள்ளத்துரைச்சிக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்து வந்துள்ளது தெரியவந்தது.

கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி இரவில் வெள்ளத்துரைச்சி கட்டாரங்குளத்திற்குச் செல்ல பஸ் இல்லாததால் தன்னை ஊரில் கொண்டு விடுமாறு சண்முகராஜிடம் கூறியுள்ளார். அவரை அழைத்துச் செல்லும் வழியில் அங்குள்ள கண்மாய் அருகில் தனிமையில் இருக்க அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் ஆட்டோவை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட வெள்ளைத்துரைச்சி

ஆனாலும் கொலையாளிகள் குறித்து போலீஸாருக்கு துப்பு கிடைக்கவில்லை. சண்முகராஜ், வெள்ளத்துரைச்சியின் உறவினர்களிடம் விசாரணை நடத்தியும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும், சிசிடிவி கேமரா காட்சிகள், செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தும், 50-க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களின் புகைப்படங்களைக் காட்டியும் சண்முகராஜால் கொலையாளிகளை அடையாளம் காண முடியவில்லை.

இதனையடுத்து கண்டுபிடிக்கப்படாத கொலை வழக்குகளில் கொலையாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட எஸ்.பி., ஆல்பட்ர் ஜான் தனி டீமை உருவாக்கினார். மீண்டும் வழக்கு விசாரணை தொடர்ந்தது. அதில், வானரமுட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கணேசன், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா, சங்கிலிபாண்டி மற்றொரு சங்கிலிபாண்டி ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி,, ஆல்பர்ட் ஜான்

விசாரணையில் அவர்கள் வெள்ளத்துரைச்சி, சண்முகராஜை அரிவாளால் வெட்டியதை ஒப்புக் கொண்டனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் கொலையாளிகள் கைதானது எப்படி என தனிப்படை போலீஸாரிடம் பேசினோம், “ஆட்டோ டிரைவர் சண்முகராஜூவுக்கும், வானரமுட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மற்றொரு ஆட்டோ டிரைவர் கணேசனுக்கும் ஆட்டோ ஸ்டாண்ட் சங்கத் தலைவர் பதவி தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் கணேசன்,  சண்முகராஜை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

2023 ஏப்ரல் 9-ம் தேதி இரவு சம்பவத்தன்று சண்முகராஜை பின் தொடர்ந்த கணேசன், காலாம்பட்டி ரோட்டில் ஆட்டோ ஓட்டிச் சென்று கொண்டிருந்த சண்முகராஜை வழிமறித்து தனது தம்பி ராஜா, உறவினர்கள் சங்கிலி பாண்டி, மற்றொரு சங்கிலி பாண்டி ஆகியோருடன் சேர்ந்து சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலையில் பலத்த வெட்டுக் காயம் விழுந்ததில் நிலைகுலைந்த ஆட்டோ ஓட்டுநர் சண்முகராஜ் மயங்கி விழுந்தள்ளார். இதையடுத்து அவர் இறந்து விட்டதாக கருதி அவரை விட்டு விட்டு அந்த ஆட்டோவில் பயணித்த வெள்ளை துரைச்சியை கொலை சம்பவம் குறித்து போலீஸிடம் சாட்சியளிப்பார் என நினைத்து அவரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.” என்றனர்.

நாலாட்டின்புதூர் காவல் நிலையம்

கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஆன், “கொலை சம்பவத்தைப் பொறுத்தவரையில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குற்றவாளிகள் தப்ப முடியாது. கோவில்பட்டியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் முற்றிலும் தடை செய்யப்படும். ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு ரவுடியிசத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்றார்.    

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.