ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் 10 போர்க் கப்பல்கள் கடற்படையில் இணைப்பு

ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் 10 போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட உள்ளன.

இந்திய கடற்படையில் 135-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் ஆகும். 20 நீர்மூழ்கிகளும் கடற்படையில் உள்ளன. வரும் 2030-ம் ஆண்டில் இந்திய போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 160 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வரும் 2035-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய கடற்படைக்காக 3-வது விமானந்தாங்கி போர்க்கப்பலை தயாரிக்கும் பணி கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஐஎன்எஸ் விஷால் என பெயரிடப்பட்டு உள்ள இந்த போர்க்கப்பல் வரும் 2030-ம் ஆண்டில் கடற்படையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் நடப்பு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதத்துக்குள் 10 புதிய போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக வரும் 18-ம் தேதி ஐஎன்எஸ் அர்னாலா கடற்படையில் இணைகிறது. இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் ஆகும். நீர்மூழ்கிகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இதே வகையை சேர்ந்த மேலும் 2 போர்க்கப்பல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் கடற்படையில் இணைக்கப்பட உள்ளன.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பல் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதுவும் விரைவில் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. மேலும் நீலகிரி வகையை சேர்ந்த போர்க்கப்பல் நடப்பாண்டு இறுதிக்குள் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக கடற்படை வட்டாரங்கள் கூறும்போது, “அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன. ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதன் மூலம் இந்த பட்டியலில் இந்தியாவும் இணைந்திருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் சுமார் 88 போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக வரும் டிசம்பர் மாதத்துக்குள் 10 போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைகின்றன” என்று தெரிவித்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.