TNPL 2025 போட்டிகள் கோவை எஸ்என்ஆர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 5வது லீக் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சாய் கிஷோர் தலைமையிலான ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணிக்கு, கேப்டன் அஸ்வின் – சிவம் சிங் ஓப்பனர்களாக களமிறங்கினர். ஆரம்பத்தில் திண்டுக்கல் அணி சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசி சற்று நல்ல நிலையில் இருந்தனர்.
இந்நிலையில் திருப்பூர் கேப்டன் சாய் கிஷோர் வீசிய 5.5-வது ஓவரில் பந்து அஸ்வினின் காலில் பட்டது. அப்போது, திருப்பூர் அணி முறையீடு செய்ய களத்தில் இருந்த பெண் அம்பயரும் அவுட் கொடுத்துவிட்டார். ஆனால், அந்த பந்து ‘அவுட் சைட் தி லெக்’ பிட்ச் ஆகியதால், அஸ்வின் அம்பயரின் முடிவில் அதிருப்தியாகி, அவரிடம் சில நொடிகள் வாக்குவாதம் செய்தார்.

இதையடுத்து கோபத்துடன் பெவிலியன் திரும்பிய அஸ்வின், தனது கிளவுஸைத் தூக்கி வீசி சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அஸ்வின் இதை ரிவ்யூ செய்திருந்தால் ‘நாட் அவுட்’ என்று வந்திருக்கும். ஆனால் அவர்கள் நடராஜன் வீசிய முதல் ஓவரிலேயே Wide கேட்டு இரண்டு ரிவ்யூகளை பயன்படுத்திவிட்டனர். முதல் ஓவரிலேயே 2 டிஆர்எஸ்களையும் இழந்துவிட்டதால், இந்த முடிவை ரிவ்யூ செய்யவில்லை. அஸ்வின் 18 ரன்களில் அவுட்டான நிலையில், அதுவே திருப்பூர் அணிக்கு திருப்புமுனையாகவும் அமைந்துவிட்டது.

பவர்பிளே முடிவில் 59 ரன்கள் என வலுவாக இருந்த திண்டுக்கல் அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது 93 ரன்களில் ஆல் அவுட்டானது. திருப்பூர் அணிக்கு இசக்கி முத்து 4 விக்கெட்களை எடுத்து அசத்தினார்.