உக்ரைன் மீது உக்கிரம் காட்டும் ரஷ்யா: ஒரே இரவில் 500 ட்ரோன்களை ஏவி தாக்குதல்!

கீவ்: மூன்று ஆண்டுகளாக தொடரும் போரில் மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலாக, உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 500 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது என உக்ரைன் விமானப்படை கூறியது.

உக்ரைன் மீது நேற்று இரவு 479 ட்ரோன்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் வரை 20 ஏவுகணைகள் பல்வேறு பகுதிகளில் ஏவப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஷ்யா முக்கியமாக மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளை குறிவைத்து தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

உக்ரைனின் விமானப்படை தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் 277 ட்ரோன்கள் மற்றும் 19 ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாகவும், 10 ட்ரோன்கள், ஏவுகணைகள் மட்டுமே தங்கள் இலக்குகளைத் தாக்கியதாகவும் கூறியது. இந்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைனின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ரஷ்யா கைப்பற்றிய இடங்களில் இருந்து, இப்போது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்துவதில் இன்னும் முன்னேற்றம் காணாத நிலையில், ரஷ்யாவும் உக்ரைனும் நேற்று தங்களின் போர்க் கைதிகளை மாற்றிக்கொண்டன. திங்களன்று அதிகமான கைதிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக ஜெலென்ஸ்கியும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவித்தன, இருப்பினும் இரு தரப்பினரும் எத்தனை பேர் என்று கூறவில்லை. வடக்கு உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில் ஒரு மருத்துவமனைக்கு வெளியே மக்கள் கூடி, தங்கள் உறவினர்கள் விடுவிக்கப்பட்டவர்களில் இருக்கிறார்களா என்று பார்த்தனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியதிலிருந்து 200க்கும் மேற்பட்ட உக்ரைன் போர்க் கைதிகள் சிறையில் இறந்துள்ளனர் என்று கடந்த மாதம் வெளியிடப்பட்ட அசோசியேட்டட் பிரஸ் அறிக்கை கண்டறிந்துள்ளது.

உக்ரைன், ரஷ்யாவுடன் தொடர்ந்து மோத மேற்கத்திய நாடுகளின் உதவியை எதிர்பார்த்துள்ளது. குறிப்பாக வான் பாதுகாப்புத் துறைகளிடமிருந்து உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் போர் குறித்த அமெரிக்காவின் சமீபத்திய நிலைப்பாடு காரணமாக உக்ரைனுக்கு உதவிகள் கிடைக்குமா எனத் தெரியவில்லை. இருப்பினும், ரஷ்யா மீது உக்ரைன் சில அதிர்ச்சியூட்டும் எதிர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ரஷ்யாவின் கோபத்துக்கான பின்புலம் என்ன? – ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க உட்பட பல நாடுகள் முயன்று வருகின்றன. ஆனால், இது பலனளிக்கவில்லை. இந்நிலையில் ரஷ்யாவின் 5 விமானப்படை தளங்களை குறிவைத்து, உக்ரைன் கடந்த 1-ம் தேதி ‘ஆபரேஷன் சிலந்தி வலை’ என்ற பெயரில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் தொலை தூர பகுதிக்குள் லாரிகள் மூலம் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்கள் கொண்டு செல்லப்பட்டு ரஷ்யாவின் குண்டு வீச்சு விமானங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 41 விமானங்கள் முற்றிலும் சேதமடைந்தன. உக்ரைனின் இந்த தாக்குதல் ரஷ்யாவை அதிர்ச்சியடைச் செய்தது.

இந்த தாக்குதலுக்காக உக்ரைனுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசிய ரஷ்ய அதிபர் புதின் கூறினார். அதன்படியே உக்ரைனின் கீவ், லிவிவ் மற்றும் சுமி உட்பட 9 முக்கிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா ஜூன் 6 மற்றும் 7ம் தேதிகளில் இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. உக்ரைன் மீது 400 ட்ரோன்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

ரஷ்யா நடத்திய தாக்குதலில், உக்ரைன் தலைநகரமான கீவ் நகரில் தீயணைப்பு வீரர்கள் 3 பேரும், லட்ஸ்க் நகரில் பொதுமக்கள் 2 பேரும், செரினிஹிவ் பகுதியில் ஒருவரும் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் உக்ரைன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், முக்கிய கட்டிடங்கள் சேதமடைந்தன. ‘‘உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள லிவிவ் நகரிலிருந்து, தென்கிழக்கு பகுதியில் உள்ள சுமி வரை 9 பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயம் அடைந்தனர்’’ என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஷ்ய ராணுவ அமைச்சகம் கூறுகையில், ‘‘ உக்ரைன் நடத்திய தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது’’ என்றது. ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து,மாஸ்கோ உட்பட ரஷ்யாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. மேலும் நெப்டியூன் ரக ஏவுகணைகளையும் வீசியது. இதில் 174 ட்ரோன்கள், 3 ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து ரஷ்யா அழித்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.