சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு: அமெரிக்காவில் கலவரம் பரவுவதால் பதற்றம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் சூறையாடப்பட்டன.

அமெரிக்காவில் சுமார் 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக மெக்ஸிகோவை சேர்ந்த 40 லட்சம் பேர் அங்கு சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இந்தியாவை சேர்ந்த 7.25 லட்சம் பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனவரியில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். இதன்படி, அமெரிக்கா முழுவதும் நாள்தோறும் 3,000 பேர் கைது செய்யப்பட்டு அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மெக்ஸிகோவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் கைது செய்யப்படுகின்றனர்.

அதிபர் ட்ரம்பின் இந்த நடவடிக்கையை கண்டித்து, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கடந்த 3 நாட்களாக தீவிர போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டங்களில் மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்று, அதிபர் ட்ரம்புக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர். போராட்டத்தின்போது, லாஸ் ஏஞ்சலஸ் முழுவதும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் சூறையாடப்பட்டன.

போராட்டக்காரர்கள் மீது லாஸ் ஏஞ்சலஸ் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். போராட்டத்தை முன்னின்று நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸாரால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அமெரிக்க அரசு சார்பில் தேசிய படையை சேர்ந்த 2,000 வீரர்கள் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். கடற்படையை சேர்ந்த 500 வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறியதாவது: அமெரிக்கா முழுவதும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். முறையான ஆவணங்கள் இருந்தும் சமூக விரோதிகளை போல எங்களை கைது செய்து நாடு கடத்துகின்றனர். அமெரிக்கா எந்தவொரு இனத்துக்கும் சொந்தமானது கிடையாது. பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேறி வாழ்கின்றனர்.

ட்ரம்பின் மூதாதையர்கள்கூட ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள்தான். இதுபோல அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 97 சதவீதம் பேர் பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறியவர்கள். 3 சதவீதம் பேர் மட்டுமே அமெரிக்க மண்ணின் மைந்தர்கள். அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினரை வெளியேற்ற வேண்டும் என்றால் 97 சதவீதம் பேரையும் வெளியேற்ற வேண்டும். அதிபர் ட்ரம்ப் இனவெறியுடன் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி டாம் ஹோமன் கூறும்போது, “லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சட்டவிரோத குடியேறிகளை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும்’’ என்றார்.

லாஸ் ஏஞ்சலஸ் போலீஸார் கூறும்போது, “போராட்டக்காரர்களின் தாக்குதலில் 3 அதிகாரிகள் உட்பட ஏராளமான போலீஸார் காயமடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் போலீஸார் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. லாஸ் ஏஞ்சலஸ் நகரம் முழுமையாக முடங்கியுள்ளது’’ என்று தெரிவித்தனர்.

லாஸ் ஏஞ்சலஸ் நகரை தொடர்ந்து, சான்பிரான்சிஸ்கோ நகருக்கும் கலவரம் பரவியுள்ளது. அங்கு வாழும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஏராளமான மக்கள் சாலை, தெருக்களில் ஆங்காங்கே கூடி நின்று, அதிபர் ட்ரம்புக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர். சான் பிரான்சிஸ்கோவிலும் ஏராளமான வாகனங்கள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல பகுதிகளிலும் கலவரம் பரவுவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

முகமூடி அணிந்தவர்களை கைது செய்ய உத்தரவு: லாஸ் ஏஞ்சலஸ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தங்களது அடையாளத்தை மறைக்க முகமூடி அணிந்துள்ளனர். இதனால், முகமூடி அணிந்துள்ள அனைவரையும் கைது செய்ய அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ‘கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஜனநாயக கட்சியை சேர்ந்த கலிபோர்னியா ஆளுநர் கெவின் நியூசம், மேயர் கரென் பாஸ் ஆகியோர் பதவி விலக வேண்டும்’ என்று சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.