லார்ட்ஸ்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரிஷப் பண்டும் செயல்பட உள்ளனர்.
இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி கடந்த 6-ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. தற்போது அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இங்கிலாந்து மண்ணில் இந்தியாவின் பும்ரா, சிராஜ் ஆகியோர் அபாரமாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவை காட்டிலும் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் இந்திய அணிக்கு சவால் வாய்ந்த தொடர் என்பது உண்மைதான். இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் என்னை பொறுத்தவரை இந்திய அணியின் பவுலிங் யூனிட்டில் குல்தீப் யாதவ் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவரிடம் நல்ல கன்சிஸ்டென்சி இருக்கிறது. அதனால் இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்குறேன்.
மேலும் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அவரால் இந்த தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதோடு இந்த தொடரில் அவர் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்றும் நினைக்கிறேன். அதுமட்டும் இன்றி தற்போது அஸ்வினை தாண்டி இந்திய அணி புதிய அத்தியாயத்திற்கு சென்றுள்ளதால் அவரால் இந்த தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.