மாநிலங்களவை தேர்தலில் 13 பேர் வேட்புமனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 6 பேர் மற்றும் சுயேச்சைகள் 7 பேர் என 13 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட, வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அந்த 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழக சட்டப்பேரவையில், எம்எல்ஏக்கள் பலம் அடிப்படையில் 6 இடங்களில் 4 திமுகவுக்கும், இரண்டு அதிமுகவுக்கும் கிடைக்கும். அதன் அடிப்படையில், திமுக சார்பில் 4 இடங்களுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அதிமுக சார்பில், தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி, கடந்த ஜூன் 2-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. முதல் நாளில், பத்மராஜன், கண்டே சயன்னா ஆகிய சுயேச்சைகள் மனுத்தாக்கல் செய்தனர். அதன்பின் கடந்த ஜூன் 6ம் தேதி, திமுக வேட்பாளர்களான மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன், திமுகவைச் சேர்ந்த பி.வில்சன், கவிஞர் சல்மா என்ற ராஜாத்தி, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

இவர்களைத் தொடர்ந்து, அதிமுக சார்பில் எதிர்க்கட்சித்தலைவர் கே.பழனிசாமி முன்னிலையில், ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் என இருவரும் வேட்பு மனுக்களை வழங்கினர். தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் பெண்ணாகரத்தைச் சேர்ந்த அக்னி ஆழ்வார் என்பவரும் சுயேச்சையாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சனி, ஞாயிறு அரசு விடுமுறை தினங்கள் என்பதால் இரு தினங்களும் மனுத்தாக்கல் இல்லை.

தொடந்து மனுத்தாக்கலின் இறுதிநாளான நேற்று, சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ரெ.கந்தசாமி, அம்பத்தூரைச் சேர்ந்த து.கு.மேஷாக் கிரபாகரன், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கே.பி.எம்.ராஜா, வேலூரைச் சேர்ந்த சு.சுப்பிரமணியன் என நால்வர் சுயேச்சைகளாக மனுத்தாக்கல் செய்தனர். நேற்று மாலை நிலவரப்படி, 13 பேர், 17 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். திமுக சார்பில் போட்டியிடும் 4 பேரும் தலா இரு மனுக்களை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இன்று மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

12ம் தேதி மாலை வரை மனுக்களை திரும்பப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்பின், போட்டியிருப்பின் வரும் ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும். இதற்கிடையில், ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிவு கடிதம் அளித்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில், திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வேட்புமனுக்களில் அந்தந்த கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் முன்மொழிவு அளித்துள்ளனர். ஆனால், சுயேச்சை வேட்பாளர்களுக்கு முன்மொழிவு கடிதம் இல்லை. எனவே, மனுக்கள் பரிசீலிக்கப்படும் போது, அவை நிராகரிக்கப்படும். திமுக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.