‘வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஷ்வின்!’
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டி ஒன்றில் நடுவர் கொடுத்த தீர்ப்பில் திருப்தியடையாத அஷ்வின், ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு க்ளவுஸை தூக்கி எறிந்து வெளியேறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அஷ்வினுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்துகளை முன் வைத்து வருகின்றனர். ஆனால், அஷ்வின் செய்திருப்பது தவறே. அதுவும் அவர் முன்வைக்கும், நம்பும் கூற்றின்படியே அவர் செய்திருப்பது பெரிய தவறுதான்.

‘என்ன நடந்தது?’
இரண்டு நாட்களுக்கு முன்பாக அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதிய போட்டி கோயம்புத்தூரில் நடந்திருந்தது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணிக்கு, கேப்டன் அஷ்வின் ஓப்பனராக களமிறங்கினார். சாய் கிஷோர் வீசிய 5வது ஓவரில் பந்து அஷ்வினின் காலில் பட்டது.
அப்போது, திருப்பூர் அணி அப்பீல் செய்ய, அம்பயரும் அவுட் கொடுத்துவிட்டார். ஆனால், அந்த பந்து ‘அவுட் சைட் தி லெக்’ பிட்ச் ஆகியதால், அஷ்வின் அம்பயரின் முடிவில் அதிருப்தியாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபத்துடன் பெவிலியன் திரும்பிய அஸ்வின், தனது கிளவுஸை தூக்கி வீசி சென்றார்.
அஷ்வின் இதை ரிவ்யூ செய்திருந்தால் நாட் அவுட் என்று வந்திருக்கும். ஆனால், அவர்கள் நடராஜன் வீசிய முதல் ஓவரிலேயே wide கேட்டு இரண்டு ரிவ்யூகளை பயன்படுத்திவிட்டதால், இந்த முடிவை ரிவ்யூ செய்ய முடியவில்லை.

‘அஷ்வின் செய்தது தவறே…’
இந்த விஷயத்தில் அஷ்வினின் அதிருப்தியை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதற்காக அவர் ரியாக்ட் செய்த விதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஏனெனில், எப்படியிருந்தாலும் நடுவரின் முடிவே இறுதியானது என்பதுதான் போட்டியின் விதிமுறை. ரிவியூவ்வில் எத்தனையோ தொழில்னநுட்பங்கள் வந்தாலும் சந்தேகத்துக்குரிய விஷயங்களிலெல்லாம் இறுதி முடிவு நடுவருடையதாகத்தான் இருக்கும்.
தொழில்நுட்பங்களால் கூட 100% துல்லியமான முடிவை அளிக்க முடியாது என்பதற்காகத்தான் இன்னமும் ‘Umpires Call’ என்கிற பதத்தை வைத்திருக்கிறார்கள். நடுவரின் முடிவு சரியோ தவறோ அதை மதித்துதான் ஆக வேண்டும். அப்படியில்லாமல் அஷ்வின் மாதிரியான அனுபவ வீரரே இப்படியெல்லாம் ரியாக்ட் செய்வது நடுவரின் முடிவுகளை அவமதிக்கும் செயலாகத்தான் பார்க்க முடியும்.
மேலும், அஷ்வின் இதை TNPL போன்ற உள்ளூர் லீகில் செய்கிறார். சுற்றி முற்றி இளம் தமிழக வீரர்கள் சூழ்ந்திருக்கையில், அஷ்வினின் இந்த செயல் நிச்சயமாக தவறான முன்னுதாரணமாகத்தான் அமையும்.

‘Practice What You Preach’
மேலும், அஷ்வினின் இந்த ரியாக்சன் அவர் நம்பும் கூற்றுக்கே எதிரானதாக இருக்கிறது. நான் ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் சமயங்களில் அஷ்வின் என்ன பேசுகிறார் என்பதைப் பாருங்கள். ‘நான் ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் முறை விதிகளின்படி சரியே. அதனால் பௌலரின் மீது தவறே இல்லை.’ என்பார். மிகச்சரியான பார்வை இது. ஆனால், அதேதானே இங்கேயும் பொருந்தும். நடுவரின் முடிவுதான் இறுதி என்கையில் அதை ஏற்றுக்கொண்டுதானே செல்ல வேண்டும்? அதைவிடுத்து இப்படி தவறான முன்னுதாரணமாக மாறி நிற்பது ஏன்? Practice What You Preach..Ashwin!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…