இந்திய மக்கள்தொகை 146 கோடியாக உயரும்: ஐ.நா. அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: ஐ.நா. மக்கள் தொகை நிதியம் (யுஎன்எப்பிஏ) 2025-ம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடியாகவும் சீனாவின் மக்கள் தொகை 141 கோடியாகவும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை 144 கோடியாக இருந்தது.

ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மக்கள் தொகை அளவை பராமரிக்க, ஒரு பெண் சராசரியாக 2.1 என்ற விகிதத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் (டிஎப்ஆர்) 1.9 ஆக குறைந்துள்ளது. 1970-களில் 5 ஆக இருந்த இது படிப்படியாக குறைந்து வருகிறது. கல்வி அறிவு அதிகரித்தது மற்றும் கருவுறுதல் தொடர்பான சுகாதார வசதிகள் அதிகரித்ததுமே இதற்குக் காரணம்.

இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தாலும் 0 முதல் 14 வயதுக்குட்பட்டோர் 24%, 10 முதல் 19 வயதுக்குட்பட்டோர் 17%, 10 முதல் 24 வயதுக்குட்பட்டோர் 26% உள்ளனர். நாட்டின் 68% மக்கள் வேலை செய்யும் வயது (15 – 64) உடையவர்களாக உள்ளனர். 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வெறும் 7% ஆக உள்ளது. ஆனால், இது வரும் காலத்தில் அதிகரிக்கும். அடுத்த 40 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக அதிகரிக்கும். அதன் பிறகு மக்கள் தொகை குறையத் தொடங்கும்.

பிஹார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசத்தில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. பெரும்பாலானவர்கள் கருத்தடை முறைகளை பயன்படுத்தாதது உள்ளிட்ட காரணங்களால் தேவையற்ற வகையில் கருவுறுவதே இதற்குக் காரணம். அதேநேரம், டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் 2%-க்கும் குறைவாக உள்ளது. குறிப்பாக இம்மாநிலங்களைச் சேர்ந்த நடுத்தர குடும்பத்து படித்த பெண்கள் குழந்தை பிறப்பை தள்ளிப் போடுகின்றனர்.

உலகம் முழுவதும் இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த 14 ஆயிரம் பேரிடம் யுஎன்எப்பிஏ சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில், எதிர்பாராத வகையில் கருவுறுவதாக 36% பேர் தெரிவித்தனர். அதேநேரம், அதிகமாக அல்லது குறைவாக குழந்தை பெற வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறவில்லை என 30% பேர் தெரிவித்தனர்.

குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு உள்ள மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக பொருளாதார வசதி உள்ளது என 10-ல் 4 பேர் தெரிவித்தனர். வேலை பாதுகாப்பின்மை (21%) வீட்டுவசதி இல்லாமை (22%) மற்றும் குழந்தை பராமரிப்பு இல்லாமை (18%) ஆகிய காரணங்களைக் கூறினர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.