மத்திய கிழக்கில் பதற்றம்; அமெரிக்க படைகள் வேறு இடத்திற்கு மாற்றம்

வாஷிங்டன்,

மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிகர காவல்படையின் தலைவர் ஹொசைன் சலாமி உள்ளிட்ட பல்வேறு முக்கிய ராணுவ தளபதிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பலியானதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கலாம் என்பதால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமாகி வருவதால் அமெரிக்க அரசு, மத்திய கிழக்கு பகுதியில் உள்ள தனது போர்க் கப்பல்கள் மற்றும் ராணுவ குழுக்களை வேறு இடத்திற்கு மாற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், “அமெரிக்க ராணுவ வீரர்கள் மத்திய கிழக்கின் சில நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறார்கள். ஏனெனில், அது ஆபத்தான பிராந்தியமாக இருக்கலாம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அமெரிக்க ராணுவ படைகளை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவு கொடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.