திருவனந்தபுரம்: கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய வடக்கு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இந்த ஆண்டு மே 24 அன்று தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் கடுமையான மழை பெய்தது. அதையடுத்து சிறிது நாட்கள் ஓய்ந்திருந்த மழை இப்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று காலை (ஜூன் 14, 2025) வெளியிட்ட வானிலை அறிவிப்பின்படி, கேரளாவின் வடக்கு மாவட்டங்களான மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகியவற்றுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூன் 14 மற்றும் ஜூன் 15) மிக கனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 14) கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்று மாவட்டங்களான ஆலப்புழா, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் ஆகியவற்றுக்கு கனமழைக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளன.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய ஐந்து நாள் வானிலை முன்னறிவிப்பின்படி, கேரளாவில் வரும் புதன்கிழமை (ஜூன் 18, 2025) வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.