பாமக-வில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் அதிகார யுத்தம் நாளுக்கு நாள் வீரியமாகிக் கொண்டே போகிறது. ராமதாஸையும் அன்புமணியையும் சமாதானப்படுத்த பாஜக தரப்பில் ஆடிட்டர் குருமூர்த்தி மூலமாக எடுக்கப்பட்ட முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், முக்கிய நிர்வாகிகள் உள்பட 45 பேரை பொறுப்புகளில் இருந்து நீக்கினார் ராமதாஸ். அவர்களில் சிலரை மீண்டும் பொறுப்பில் அமர்த்தி அதிரடி காட்டினார் அன்புமணி. கட்சிக்குள் நடக்கும் இந்த ஏட்டிக்குப் போட்டிகளை எல்லாம் பார்த்துவிட்டு, கீழ்மட்ட நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சி முகாம்களுக்கு தூதுவிட தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
பாமக-வில் அன்புமணியின் ஆதிக்கத்தைப் பிடிக்காமல் தான் பண்ருட்டி வேல்முருகன் உள்ளிட்ட செல்வாக்கான மனிதர்கள் கட்சியை விட்டு விலகினார்கள். இதில், வேல்முருகன் தமிழக வாழ்வுரிமை கட்சியைத் தொடங்கி தற்போது திமுக கூட்டணியில் எம்எல்ஏ-வாகவும் இருக்கிறார். தந்தைக்கும் மகனுக்கும் மோதல் வெடித்த சமயத்தில், கட்சியை பலப்படுத்துவதற்காக வேல்முருகன், காடுவெட்டி குருவின் மகன் உள்ளிட்டவர்களை மீண்டும் பாமக-வுக்குள் கொண்டுவர ராமதாஸ் தரப்பில் ஒரு மூவ் நடந்ததாகச் சொல்கிறார்கள்.
இந்த நிலையில் அண்மையில், வேல்முருகனின் சகோதரரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவருமான திருமால்வளவன் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, “நான் வந்துவிட்டேன் என்பதால் சீக்கிரமே அன்புமணியும் அய்யாவை சந்திக்க வந்து விடுவார்” என்று சொன்னார் திருமால்வளவன்.
அதுபோலவே, ராமதாஸை சந்திக்க தைலாபுரத்துக்கு ஓடோடி வந்தார் அன்புமணி. ஆனாலும் அப்போது ராமதாஸும் அன்புமணியும் முகம்கொடுத்து பேசிக்கொள்ளவில்லை என்கிறார்கள். அதேசமயம், வேல்முருகன் உள்ளிட்டவர்கள் மீண்டும் பாமக-வுக்குள் வந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் தான் அன்புமணி தைலாபுரத்துக்கு வந்து போனதாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில், பாமக-வில் தற்போது நிலவும் நிச்சயமற்ற சூழலைப் பயன்படுத்தி பிறகட்சிகள் பாமக-வின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு வலைவீச ஆரம்பித்திருக்கின்றன.
அதேசமயம் சமுதாய ரீதியாக சிந்திக்கும் பாமக-வினர் பலரும் வேல்முருகன் அலுவலகக் கதவைத் தட்டி வருவதாக ஒரு செய்தி தடதடக்கிறது. இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனிடம் கேட்டதற்கு, “பாமக-வில் இருந்து தாமாக வருவோரை வரவேற்கிறோம். தென்மாவட்டங்களில் இருந்து பலர் தவாக-வில் இணைந்துள்ளனர். தவாக-வை பாமக உடன் இணைக்கப் போவதாக செய்தி பரப்புகிறார்கள்.
ஆனால், அப்படியான திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை. ஏனென்றால் நாங்கள் பாமக-வை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம். மாநிலம் முழுக்க கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்கப்பட்டு எங்கள் கட்சியானது மாநிலக் கட்சியாக திகழ்ந்து வருகிறது. இடதுசாரி சிந்தனையாளர்கள் பலர் எங்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், எங்களுடன் இணைந்து மக்கள் பணியாற்ற வருவோரை இன்முகத்தோடு வரவேற்கிறோம்” என்றார்.
இதனிடையே பாமக எம்எல்ஏ-க்கள் இருவருக்கு திமுக குறிவைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதில் ஒருவரை அழைத்து வரும் பொறுப்பு சேலம் எம்பி-யான டி.எம்.செல்வகணபதி வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பாமக வட்டாரத்திலேயே கிசுகிசுக்கிறார்கள்.
பாமக-வினர் மாற்று முகாம்களை நோக்கி நகர ஆரம்பித்திருப்பது குறித்து பாமக-வின் நிர்வாகக் குழு உறுப்பினரான தர்மலிங்கத்திடம் கேட்டதற்கு, “தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் மனத்தாங்கலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள் ஆறுதல் கூற வருகிறோம் என்ற பெயரில் வந்து பார்ப்பது பாமக தொண்டர்கள் மத்தியில் ஆதங்கத்துடன் கூடிய அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பது உண்மை தான்.
இருந்தாலும் விரைவில் இருவரும் கலந்துபேசி நல்ல முடிவை எட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் எங்களைப் போன்றவர்கள் அமைதியாக இருக்கிறோம்” என்றார். ஒரு காலத்தில் வெயிட்டான மத்திய அமைச்சர்களையும் தன்னகத்தே வைத்திருந்த பாமக-வுக்கா இப்படியொரு நிலை வரவேண்டும்?