புதுடெல்லி,
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787-8 டிரீம்லைனர்’ விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
விமானத்தில் இருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள், கனடாவை சேர்ந்தவர் ஒருவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர்கள் என ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான விபத்தை தொடர்ந்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அந்நிறுவனத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் ‘போயிங்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், விமான விபத்து குறித்த விசாரணையில் வெளிப்படையாக இருப்போம் என டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘ஏர் இந்தியா’ ஊழியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;-
“இது மிகவும் கடினமான நேரம். நேற்று நடந்தது விவரிக்க முடியாதது. நாங்கள் அதிர்ச்சியிலும், துக்கத்திலும் இருக்கிறோம். ஒரு மனிதரை இழப்பது பெரும் சோகம். ஆனால் ஒரே நேரத்தில் இத்தனை உயிரிழப்புகள் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்த வழக்கமான விமான பயணம் ஏன் ஒரு பேரிடராக மாறியது என்பதை அதிகாரிகளின் முழுமையான விசாரணைக்கு பிறகே நம்மால் புரிந்து கொள்ள முடியும். விசாரணையில் தெரியவரும் உண்மைகளை சரிபார்த்து, வெளியிடுவதில் நாங்கள் வெளிப்படையாக இருப்போம்.
இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இருந்து விசாரணைக் குழுக்கள் அகமதாபாத்திற்கு வந்து தங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளன. அவர்களுக்கு எங்கள் முழு ஒத்துழைப்பு உள்ளது. விசாரணை வெளிப்படையாக நடைபெறுவதை உறுதி செய்வோம். இந்த நேரத்தில் எந்தவித யூகங்களும் தீங்கு விளைவிக்க கூடியதாக அமையும்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் முதல் மற்றும் முக்கிய முன்னுரிமை. அதில் எந்த சமரசமும் இல்லை. நம்பிக்கை மற்றும் அக்கறையின் அடிப்படையில் இந்த குழுமத்தை நாங்கள் உருவாக்கினோம். இது ஒரு கடினமான தருணம். ஆனால் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். இந்த இழப்பை நாங்கள் சுமப்போம். நாங்கள் இதை மறக்க மாட்டோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.