அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்காகவும், பல்வேறு ஊர்களுக்கு அவர்களது உடலை அனுப்புவதற்காகவும் ஏராளமான சவப்பெட்டிகளை தயார் செய்யும் பணிகள் வதோதரா நகரில் நடைபெற்று வருகின்றன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 3 நாட்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். மேலும் விமானம் விழுந்த பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த 33 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 274-ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். அவர்களது உடலை அடக்கம் செய்வதற்காகவும், சொந்த ஊருக்கு அனுப்பவும் ஏராளமான சவப்பெட்டிகளை தயார் செய்யும் பணி வதோதரா நகரில் நடைபெற்று வருகிறது.
நேற்று மாலை வரை 25 பேரின் உடல்கள், சவப்பெட்டியில் வைக்கப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சவப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையின் உரிமையாளர் எட்வின் கூறும்போது, “ஒரு சவப்பெட்டி செய்ய 2 முதல் 3 மணி நேரமாகும். தற்போது நாங்கள் 8 தொழிலாளர்கள் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக வேலை பார்த்து சவப்பெட்டிகளை தயாரித்து வருகிறோம்.
இதுபோன்ற கோர விபத்து நடந்ததை நம்பவே முடியவில்லை. எங்களின் ஒட்டுமொத்த குழுவும் உணர்ச்சிகளால் நிறைந்துள்ளோம். கசிவு மற்றும் அசுத்தம் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு சவப்பெட்டியின் உள்ளேயும் பிளாஸ்டிக் ஷீட்களை வைத்து தயார் செய்வோம். நேற்று வரை 25 சவப்பெட்டிகளை தயார் செய்து கொடுத்துள்ளோம். தற்போது மேலும் சில சவப்பெட்டிகள் தயாராகியுள்ளன. அவற்றை இன்று இரவுக்குள் அனுப்பி விடுவோம்” என்றார்.