கரூர் அடுத்த வெண்ணைமலையைச் சேர்ந்தவர் முருகராஜ். இவருக்கும், திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த காவியா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணத்திற்கு பின் இருவருக்கும் சிறு சிறு பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், காவியா நேற்று மதியம் திடீரென வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், காவியாவின் உறவினர்களுக்கு, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காவியாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பதறிப்போன காவியாவின் உறவினர்கள் வந்து சேர்வதற்குள் காவியா இறந்ததாக தகவல் சென்றுள்ளது. இதனை அடுத்து, காவியாவின் உடல் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படுவதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. ஆனால், உறவினர்கள் வந்த பிறகும் காவியாவின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் யாரும் மருத்துவமனைக்கு வராததால் காவியாவின் உறவினர்கள் சந்தேகமடைந்து சாவில் மர்மம் இருப்பதாக கூறி கரூர் – திருச்சி நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த சாலை மறியல் போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர்.

ஆனால், காவியாவின் உறவினர்கள் உறுதியாக போராட்டத்தில் ஈடுபட்டதால் கோபமடைந்த பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார், போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை தகாத வார்த்தைகளால் பேசி தள்ளிவிட்டார். அடிக்க முயன்றதோடு, காவியாவின் உறவினர் கையில் இருந்த செல்போனையும் தட்டி விட்டார். இதனால், இரண்டு தரப்புக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, காவியாவின் உறவினர்களிடம், கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி, ‘உரிய விசாரணை நடத்தப்படும்’ என வாக்குறுதி அளித்த பிறகு, போராட்டத்தை கைவிட்ட காவியாவின் உறவினர்கள் உடற்கூறாய்வு செய்யும் இடத்திற்கு வந்தனர். இந்நிலையில், காவல் ஆய்வாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தகாத வார்த்தைகள் பேசி, தாக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.