தெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டு வீசினால், இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் என்று ஈரான் படைகளின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால், இந்தத் தகவலை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில நாட்களாக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் சுமார் 248 பேர் (ஈரான் 230 மற்றும் இஸ்ரேல் 18) உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஈரான் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பேசிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த அதிகாரியும், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினருமான மொஹ்சென் ரெசே,”இஸ்ரேல் ஈரான் மீது அணுகுண்டை வீசினால், இஸ்ரேலை அணு ஆயுதத்தால் தாக்குவோம் என்று பாகிஸ்தான் எங்களுக்கு உறுதியளித்துள்ளது.
பாகிஸ்தான் ‘ஈரானுக்குப் பின்னால் நிற்பதாக’ சபதம் செய்துள்ளதுடன், முஸ்லிம் உலகத்தை ஒன்றுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த ஒரு ஏவுகணை பரிமாற்றத்தைத் தொடர்ந்து நட்புறவு ஏற்பட்டுள்ளது. எங்களிடம் இன்னும் உலகிற்கு வெளிப்படுத்தப்படாத மறைக்கப்பட்ட திறன்கள் இருக்கிறது” என்று கூறினார்.
ICAN (சர்வதேச அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான பிரச்சாரம்) படி, இஸ்ரேலும் பாகிஸ்தானும் தற்போது அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒன்பது நாடுகளில் அடங்கும்.
இருப்பினும், இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து பாகிஸ்தானிடமிருந்து எந்தக் கருத்தும் இதுவரை வரவில்லை. ஆனால் மேற்கத்திய உலகின் ஆதரவைப் பெற்ற இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் ஈரானை பாகிஸ்தான் ஆதரித்துள்ளது.
நேற்று இரவு இஸ்ரேலின் அணுசக்தி வலிமை குறித்து கவலைகளை எழுப்பிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப், “இஸ்ரேலால் உருவாக்கப்படும் மோதல்கள் குறித்து மேற்கத்திய உலகம் கவலைப்பட வேண்டும். இது முழு பிராந்தியத்தை மட்டுமல்ல அதற்கு அப்பாலும் உள்ள பிராந்தியங்களையும் மூழ்கடிக்கும். முரட்டு நாடான இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பது பேரழிவை ஏற்படுத்தும்.” என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் மறுப்பு: இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எங்களுடைய அணுசக்தி என்பது எங்கள் மக்களின் நன்மைக்காக, எங்கள் நாட்டின் தற்காப்புக்காக உள்ளது. ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று நாங்கள் எங்கும் வாக்குறுதி அளிக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.