அமராவதி,
தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் பாசரா என்ற இடத்தில் சரஸ்வதி அம்மன் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலில் தரிசனம் செய்வதற்காக விடுமுறை தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதற்கிடையே ஐதராபாத்தில் உள்ள சிந்தல் பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பதைச் சேர்ந்த 18 பேர் நேற்று சரஸ்வதி கோவிலுக்கு வந்தனர்.
முன்னதாக அனைவரும் அருகில் உள்ள கோதாவரி ஆற்றில் குளித்தனர். அந்த சமயத்தில் ஆற்றில் அளவுக்கு அதிகமாக நீர்வரத்து இருந்ததால், 5 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் உள்ளூர் மக்களின் உதவியோடு மாயமானவர்களை தேடினர். அதற்குள் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஆனால் அதற்குள் ராகேஷ்(வயது 18), வினோத் (18), மதன்(18), ரித்திக்(18) உள்ளிட்ட 5 பேரும் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டனர். உடல்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள், அவற்றை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கோவிலுக்கு வந்த இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 வாலிபர்கள் பலியான சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.