ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில் ஜூலை 16 முதல் விசாரணை தொடக்கம்

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள்அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை, மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. ஜூலை 16-ம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடங்க உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரன் என்பவர், தனது உறவினருக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதாக அளித்த புகாரின் பேரில் விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2021 நவம்பரில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அதிமுக நிர்வாகி மாரியப்பன் ஆகியோர் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

அதே நாளில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலர் உள்ளிட்ட வேலைகளுக்கு பலரிடம் பணம் பெற்று, ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் பாபு ராஜ், பலராமன், முத்துபாண்டி ஆகிய 4 பேர் மீது மோசடி உட்பட 4 பிரிவுகளில் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது 2023 ஜனவரியில் ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம், மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மே 19-ம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. ஜூலை 16-ம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடங்கவுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.