சென்னை: இயந்திர கோளாறு ஏற்பட்டதால் லண்டன் – சென்னை – லண்டன் விமான சேவை திடீரென்று ரத்து செய்யப்பட்டது. சென்னை – லண்டன் – சென்னை இடையே பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், தினசரி விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்த விமானத்தில், லண்டன் பயணிகள் மட்டுமின்றி நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளும் பயணிக்கின்றனர்.
அதனால், இந்த விமானத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். லண்டனிலிருந்து புறப்படும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்துவிட்டு, பின்னர் சென்னையிலிருந்து அதிகாலை 5.35 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு லண்டனிலிருந்து 360 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நடுவானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து, விமானம் உடனடியாக திரும்பிச் சென்று, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனால், நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னைக்கு வர வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும், சென்னையிலிருந்து லண்டனுக்கு நேற்று அதிகாலை 5.35 மணிக்கு லண்டன் புறப்படும் விமானமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், லண்டனிலிருந்து சென்னை வரவேண்டிய 366 பயணிகள், சென்னையிலிருந்து லண்டன் செல்ல இருந்த 366 பயணிகள் அவதிக்குள்ளாகினர். இது தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, “அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் புறப்படுவதற்கு முன்னதாக, விமானங்களின் இயந்திரங்கள் தொடர்ச்சியாக 2 அல்லது 3 முறை சரிபார்க்கப்படுகின்றன.
விமான இயந்திரங்களில் சிறிய அளவில் பாதிப்புகள் இருந்தாலும், அதை முழுமையாக சரி செய்த பின்பே, விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால்தான் விமானங்கள் தாமதமாகின்றன; ரத்து செய்யப்படுகின்றன” என்றனர்.