புதுடெல்லி: வயிற்றுத் தொற்று காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி, உடல்நல பாதிப்பு தொடர்பாக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததை அடுத்து, அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து டெல்லி திரும்பிய சோனியா காந்தி கடந்த 9-ம் தேதி சர் கங்கா ராம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.
இந்நிலையில், வயிற்று வலி காரணமாக சோனியா காந்தி மீண்டும் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 78 வயதாகும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் நல்ல ஒத்துழைப்பு நல்கி வருவதாகவும் மருத்துவமனையின் மருத்துவர் அஜய் ஸ்வரூப் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“அவர் உடல்நிலை நன்றாக உள்ளது. சிகிச்சைக்கு நல்ல முறையில் அவரது உடல் ஒத்துழைக்கிறது. வயிற்றுத் தொற்றிலிருந்து அவர் மீண்டு வருகிறார். அவரது உணவுமுறை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. மேலும் அவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவரது டிஸ்சார்ஜ் ஆகும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எங்கள் மருத்துவர்கள் குழு, டாக்டர் எஸ்.நந்தி மற்றும் டாக்டர் அமிதாப் யாதவ் ஆகியோர் அவரது உடல்நலம் மற்றும் உணவை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.