இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம்: ட்ரம்ப்பிடம் தெளிவுபடுத்தினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க நாடு எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளார். இத்தகவலை மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இனிமேலும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்காது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கனடா நாட்டில் ஆல்பர்ட்டா மாகாணம் கனானாஸ்கிஸ் பகுதியில் 2 நாள்கள் நடைபெற்ற ஜி 7 உச்சிமாநாடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. கனடா தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள அந்தக் கூட்டமைப்பின் மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலனி, ஜெர்மனி பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ட்ரம்பும் கனடா வந்திருந்தார். இதனிடையே, இஸ்ரேல் – ஈரான் நாடுகளிடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கனடாவிலிருந்து நேற்று முன்தினம் (ஜூன் 17) அமெரிக்காவுக்கு அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்றார். இதனால், ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெறவில்லை.

இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிட நேரம் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இந்த உரையாடலின்போது, இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்ந்து நடைபெற்று வருவதாக ட்ரம்பிடம், பிரதமர் மோடி தெளிவுபடுத்தியிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

இந்த உரையாடல் குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜி 7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடிக்கும் அதிபர் ட்ரம்ப்புக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால், அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவுக்கு முன்கூட்டியே திரும்ப வேண்டியிருந்தது. இதனால் இந்த சந்திப்பு நடக்கவில்லை. இதன் பிறகு, அதிபர் ட்ரம்பின் வேண்டுகோளின் பேரில், இரு தலைவர்களும் இன்று தொலைபேசியில் பேசினர்.

இருவரும் இன்று சுமார் 35 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினர். உரையாடலின் போது, பாகிஸ்தானின் தாக்குதலுக்கு, இந்தியா ஏவுகணைகள் மூலம் பதிலடி கொடுக்கும் என்றும், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வர்த்தக ரீதியான எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை. பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதன் பேரிலிேயே போர் நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்தப் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பிரதமர் மோடி அதிபர் ட்ரம்ப்பிடம் திட்டவட்டமாக தெரிவித்தார். இரு நாடுகளிடையிலான போர் ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா ஏற்கவில்லை என்றும் இனிமேலும் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதை இந்தியா ஏற்காது என்றும் பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார்.

அப்போது, ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப்பிடம் விரிவாகப் பேசினார். ஏப்ரல் 22 க்குப் பிறகு, தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான தனது உறுதியை இந்தியா முழு உலகுக்கும் தெரிவித்ததாக பிரதமர் மோடி, ட்ரம்ப்பிடம் தெளிவாகக் கூறினார். மே 6, 7-ம் தேதிகளில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத மறைவிடங்களை மட்டுமே இந்தியா குறிவைத்ததாகவும் பிரதமர் மோடி அப்போது தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் மிகவும் அளவிடப்பட்டவை, துல்லியமானவை மற்றும் தீவிரப்படுத்தப்படாதவை என்றும் மோடி தெரிவித்தார். இவ்வாறு விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவிகள் உயிரிழந்தனர்.

இதையடுத்து, கடந்த மே 7-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஆயுதப் படைகள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தீவிரவாதிகள், ராணுவ அதிகாரிகள் உடபட 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து போர் நிறுத்தம் செய்ய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தத்துக்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல்வேறு இடங்களில் தெரிவித்து வந்தார். இதற்கு முடிவுகட்டும் விதமாக பிரதமர் மோடி தற்போது அதிபர் ட்ரம்ப்பிடம் இதுபற்றி தெளிவுபடுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.