இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணியின் கேப்டன்சி பதவி தனக்கு வந்ததாகவும் ஆனால் நான் அதை நிராகரித்தேன் என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்சி தொடர்பாக பிசிசிஐ தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் என்னால் விளையாட முடியாது என்பதால் நான் அதனை நிராகரித்தேன் என்றும் பும்ரா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் துருப்புச் சீட்டாக பும்ரா இருந்து வந்தாலும் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிய பும்ராவால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முடியவில்லை. காரணம் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி வென்று இருந்தது. ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்துள்ளதால் இங்கிலாந்து தொடரில் இருந்து டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும் என்று பிசிசிஐ தன்னிடம் தெரிவித்ததாகவும் பும்ரா தெரிவித்துள்ளார்.
பும்ரா பேச்சு
“விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த போது பிசிசிஐ என்னுடன் கேப்டன்சி தொடர்பாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. நான் என்னுடைய மருத்துவரிடம் பேசி ஒரு முடிவுக்கு வந்தேன். என்னால் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என்பதை நான் உணர்ந்தேன். அதன் பிறகு பிசிசிஐ இடம் மூன்று போட்டிகளுக்கு நான் கேப்டன் ஆக இருக்கிறேன், 2 போட்டிகளுக்கு வேறு ஒருவர் கேப்டனாக இருக்கட்டும் என்று என்னால் சொல்ல முடியாது. அதன் காரணமாக கேப்டன்சியிலிருந்து நான் முழுவதும் விலகினேன். பிசிசிஐக்கு முதல் தேர்வாக நான் தான் இருந்தேன், ஆனால் எனக்கு ஏற்படும் காயம் காரணமாக நானே மறுத்து விட்டேன். எனக்கு என்னுடைய வளர்ச்சியை விட அணியின் வளர்ச்சி தான் முக்கியம்” என்று பும்ரா தெரிவித்துள்ளார்.
சுப்மான் கில்
பும்ராவின் இந்த முடிவுக்கு பிறகு தான் சுப்மான் கில் இந்திய அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்றுள்ளார். கில் தலைமையில் தான் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தேசிய தேர்வாளர் அஜித் அகார்கர், பும்ரா அவரது உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாறாக டெஸ்ட் கேப்டன் என்ற பெரிய பொறுப்பில் சிரமப்பட வேண்டாம் என்று நாங்கள் நினைத்தோம் என்று தெரிவித்து இருந்தார். ரோகித் சர்மா கேப்டன் ஆக இருந்தபோது துணை கேப்டனாக பும்ரா செயல்பட்டார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் பும்ரா கேப்டன் ஆகவும் செயல்பட்டார். முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்தாலும் அந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. பும்ரா ஐந்து போட்டிகளிலும் விளையாடிய நிலையில், கடைசி போட்டியில் காயம் ஏற்பட்டது.