ஸ்ரீநகர்: அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் “பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி” களாக அறிவித்து ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ல் தொடங்கி ஆகஸ்ட் 8 உடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, யாத்திரைக்கான பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து வழிகளிலும் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பஹல்காம் மற்றும் பால்தால் வழியான பாதைகளும் அடங்கும்.
இந்த உத்தரவையடுத்து வரும் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை அமர்நாத் யாத்திரை பகுதிகளில் பலூன்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட எந்தவகையான சாதனங்களும் பறப்பதற்கு தடைவிதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகான பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டே லகான்பூர்-ஜம்மு-காசிகுண்ட்-பஹல்காம் மற்றும் லகான்பூர்-ஜம்மு-காசிகுண்ட்-ஸ்ரீநகர்-சோனமார்க் வழித்தடங்களை பறக்கத் தடைசெய்யப்பட்ட மண்டலங்களாக அறிவிக்க ஜம்மு காஷ்மீர் அரசு முடிவெடுத்துள்ளது.