பிஹார் தொழிற்சாலையில் இருந்து கினியாவுக்கு ஏற்றுமதியாகும் முதல் ரயில் இன்ஜின்: பிரதமர் 20-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

பாட்னா: பிஹார் தொழிற்சாலையில் இருந்து கினியாவுக்கு ஏற்றுமதியாகும் முதல் ரயில் இன்ஜினை பிரதமர் நரேந்திர மோடி வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்தியன் ரயில்வேஸ் தனது வருவாயை அதிகரிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவுக்கு ரயில் இன்ஜின்களை ஏற்றுமதி செய்ய உள்ளது. பிஹாரின் சரண் மாவட்டம், மர்ஹோராவில் உள்ள டீசல் ரயில் இன்ஜின் தொழிற்சாலையில் ஏற்றுமதிக்காக தயாரிக்கப்பட்ட முதல் ரயில் இன்ஜினை பிரதமர் மோடி வரும் 20-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி அப்போது, பிஹாரின் பாடலிபுத்ரா, உ.பி.யின் கோரக்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கி வைப்பார். பொதுத்துறை – தனியார் கூட்டாண்மை நிறுவனமான மர்ஹோரா தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாப்டெக் நிறுவனத்தின் ஓர் அங்கமான ஜி.இ. டிரான்ஸ்போர்டேஷன் மற்றும் இந்திய ரயில்வேயின் கூட்டு முயற்சியால் இது நடத்தப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கினியா வெளியிட்ட உலகளாவிய டெண்டரில் இந்த தொழிற்சாலை ஏலத்தை வென்றது. மூன்று ஆண்டுகளில் மொத்தம் 150 ரயில் இன்ஜின்கள் கினியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும். 2025-26 நிதியாண்டில் 37 இன்ஜின்களும் அடுத்தடுத்த நிதியாண்டுகளில் 82 மற்றும் 31 ரயில் இன்ஜின்களும் வழங்கப்படும். மொத்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.3,533 கோடி (41.1 கோடி டாலர்) ஆகும். இதன்படி ஓர் இன்ஜின் மதிப்பு ரூ.23.55 கோடி (27.4 லட்சம் டாலர்) ஆகும்.

இந்த ரயில் இன்ஜின்கள் கினியாவின் இரும்புத் தாது சுரங்கங்களில் இருந்து சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும். இந்த இன்ஜின்கள் 4,500 குதிரைத்திறன் கொண்டவை. கழிப்பறை, ஏசி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டிருக்கும். இந்த ரயில் இன்ஜின்கள் 8,000 டன் சரக்குகளை எடுத்துச் செல்லும். இரண்டு இன்ஜின்கள் சேர்ந்து 100 வேகன்களின் சுமையை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகத்தில் இழுத்துச் செல்லும். இது 24 மணி நேரத்தில் 1,200 கி.மீ. தொலைவை கடக்கும் என எதிர்பார்கிறோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

ரயில் இன்ஜினை இந்திய ரயில்வே ஏற்றுமதி செய்வது இதுவே முதல் முறை. முந்தைய ஏற்றுமதிகள் கடன் வடிவில் செய்யப்பட்டன. அவை பல்வேறு நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவியாக இருந்தன. வங்கதேசம், மொசாம்பிக் போன்ற நாடுகளுக்கு ரயின் இன்ஜின்கள் அனுப்பப்பட்டன. டெண்டரில் ஏலம் வென்று ரயில் இன்ஜின் தயாரிப்பது இதுவே முதல்முறையாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.