சேலம்,
டி.என்.பி.எல். தொடரில் சேலத்தில் இன்று நடைபெற்று வரும் 15-வது லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாசீம் அகமது – சுஜய் சிவசங்கரன் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் வாசீம் அகமது 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜெகதீசன் கவுஷிக் 5 ரன்களிலும், சிவசங்கரன் 25 ரன்களிலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சய் யாதவ் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். திருச்சி அணியின் பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரன்வேகம் மந்தமாகவே நகர்ந்தது.
இறுதி கட்டத்தில் ராஜ்குமார் அதிரடியாக விளையாடி அணியின் ரன்ரேட்டை உயர்த்தினார். கோவை அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் 24 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் திருச்சி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் அடித்துள்ளது. கோவை தரப்பில் சுப்ரமணியன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கோவை களமிறங்க உள்ளது.