ஏர் இந்தியா விபத்துக்குப் பிறகு விமான பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள கட்டடங்களை நெறிப்படுத்தும் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம்.
கடந்த ஜூன் 12ம் தேதி போயிங் 787 விமானம் புறப்படுகையில் ஏற்பட்ட விபத்தினால் பிஜே மருத்துவ கல்லூரியில் விமானம் மோதியது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் மற்றும் மருத்துவமனை கட்டடத்திலிருந்த 38 பேர் என 279 மரணமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து ஒருவார காலத்தில், விமான நிலையம் அருகில் இருக்கும் கட்டடங்கள் மரங்கள் உள்ளிட்ட தடைகளை நீக்குவதற்கான விமான விதிகள் 2025 வெளியாகியிருக்கின்றன.
இந்த விதி அதிகாரிகள், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பிட்ட வரையரைக்குள் தடைகளை ஏற்படுத்தும்விதமாக இருக்கும் கட்டடங்கள், மரங்கள் பற்றி புகாரளிக்கவும், அதன் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் ஆவண செய்கின்றன.
இந்த விதிகள் அதிகாரபூர்வமாக அரசிதழில் வெளியிடப்படும் தேதியில் இருந்து அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறிய கட்டங்கள் அல்லது மரங்கள் இருக்கும் விமான நிலையத்தின் அதிகாரி, உனடடியாக அது தொடர்பாக இயக்குநர் ஜெனரலுக்கு (DGCA) அல்லது இது தொடர்பான உரிய அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும் என வழிகாட்டுகிறது புதிய விதிமுறை.
அதிகாரிகள் வழங்கும் நோட்டீஸுக்கு இணங்கவில்லை என்றால், மாவட்ட ஆட்சித்தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, அங்கீகரிக்கப்படாத கட்டடத்தை இடிப்பார் அல்லது அதன் உயரத்தை குறைப்பார்.
இதில் பாதிக்கப்படும் உரிமையாளர் நோட்டீஸ் வழங்கப்பட்ட பிறகு, முதல் அல்லது இரண்டாவது மேல் முறையீட்டு அலுவலகத்தை நாடி மேல்முறையீடு செய்ய முடியும். பாதிக்கப்பட்டவர் தங்கள் தரப்பை எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்ட பிறகு அதிகாரி உத்தரவு பிறப்பிப்பார்.
இந்த புதிய விதி குறித்த ஆட்சோபனைகள், பரிந்துரைகள் இருந்தால் அமைச்சகத்தில் சமர்பிக்குமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.