பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக கர்நாடக அரசு கூட்டங்களைக் கையாள புதிய சட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, பெரும் நிகழ்ச்சிகளை நடத்தும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு பொறுப்பாவார்கள், மூன்று வருட சிறை தண்டனை, ரூ.5 லட்சம் வரை அபராதம் என்று பல்வேறு விதிகளை வகுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான வரைவு அறிக்கையில், நிகழ்ச்சிகளை நடத்தும் முன்னர் நிகழ்ச்சி நடத்தும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் அரசுக்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும். கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால், அதன்மூலம் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு இழப்பீடுகள் தரத் தவறினால், புதிய சட்டங்களின்படி மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ.5 லட்சம் வரை அபராதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் போன்ற கெடுபிடிகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது.
கடந்த (ஜூன் 4) அன்று ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதைக் கொண்டாட பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் கர்நாடகா அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், கர்நாடக அரசு கூட்டங்களைக் கையாள புதிய சட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.