2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசூகி ஸ்விஃப்ட் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக வெற்றிகரமான ஹேட்ச்பேக் காராக தொடர்ந்து விளங்கி வரும் நிலையில் 30 லட்சத்துக்கும் கூடுதலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் கார் விற்பனையில் 31 % பங்களிப்பை பெற்றுள்ள ஸ்விஃப்ட் இந்நிறுவனத்தின் விற்பனையில் 10% சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது.
Maruti Suzuki Swift
மே 2005ல் வெளியிடப்பட்ட முதல் தலைமுறை ஸ்விஃப்ட் ஆனது ஹேட்ச்பேக் பிரிவில் புதிய வடிவமைப்பினை பெற்றதாக விளங்கியது. இலகு எடை மற்றும் வேகமான மாடலாக இரண்டாம் தலைமுறை 2011ல் வெளியானது. மூன்றாம் தலைமுறை 2018ல் வந்த ஸ்விஃப்ட் உயர் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு மாற்றங்களைச் சேர்த்தது.
2024ல் அறிமுகப்படுத்தப்பட்ட நான்காவது தலைமுறை ஸ்விஃப்ட், மேம்பட்ட எரிபொருள் திறன் மற்றும் குறைந்த உமிழ்வுக்காக வடிவமைக்கப்பட்ட மூன்று சிலிண்டர் Z-சீரிஸ் எஞ்சினைக் கொண்டு வந்திருப்பதுடன் ஆறு ஏர்பேக்குகள், ESP, EBD உடன் ABS, ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், மூன்று-புள்ளி சீட்பெல்ட்கள் மற்றும் சீட்பெல்ட் ரிமைண்டர் என பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளை பெற்றுள்ளது.
இந்தியாவில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக MSIL நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைத் துறையின் மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் கிட்டத்தட்ட நான்கு உரிமையாளர்களில் ஒருவர் மீண்டும் ஸ்விஃப்ட் மாடலை திரும்ப வாங்குவதாகவும், தற்போது அதன் பிரிவில் 31% பங்கைக் கொண்டுள்ளது மற்றும் MSIL இன் ஒட்டுமொத்த விற்பனையில் 10% க்கும் அதிகமாக உள்ளது என குறிப்பிட்டார்.