சென்னை: அதிமுக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வால்பாறை தொகுதி மக்களுக்கும், அதிமுக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டி.கே.அமுல் கந்தசாமி: கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டாபாளையத்தைச் சேர்ந்தவர் டி.கே.அமுல் கந்தசாமி. இவர் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வால்பாறை (தனி) தொகுதியில் போட்டியிட்டு 13,165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் அதிமுகவில் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.