பாக். உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அமல்படுத்தாது: அமித் ஷா

புதுடெல்லி: பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அமல்படுத்தாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, ​​“இல்லை, அது ஒருபோதும் அமல்படுத்தப்படாது. ஒரு கால்வாய் அமைப்பதன் மூலம் பாகிஸ்தானுக்குப் பாயும் தண்ணீரை, ராஜஸ்தானுக்கு எடுத்துச் செல்வோம். நியாயமற்ற முறையில் தண்ணீரைப் பெற்று வந்த பாகிஸ்தான் தண்ணீரின்றி தவிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

சிந்து நதி நீரை இந்தியாவும், பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்வதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இரு நாடுகளுக்கு இடையே கடந்த 1960-ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. பரஸ்பர நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வந்தது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்தியா இந்த ஒப்பந்தத்தை நிறுத்தியது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவை, பாகிஸ்தான் பல முறை வலியுறுத்தியது. பாகிஸ்தானின் நீர்வளத்துறை செயலாளர் சையத் அலி முர்தாசா, இந்தியாவின் ஜல் சக்தி அமைச்சகத்திற்கு இது தொடர்பாக 4 கடிதங்களை எழுதியுள்ளார். ஒப்பந்தத்தை இந்தியா மீறுகிறது என்றும், ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் ஒருதலைப்பட்சமாக ரத்து செய்ய அனுமதி இல்லை என்றும் பாகிஸ்தான் கூறி வருகிறது.

எனினும், “பேச்சுவார்த்தைகளும் பயங்கரவாதமும் ஒன்றாகச் செல்ல முடியாது” என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. மேலும், பாகிஸ்தான் தனது எல்லைக்குள் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியளிப்பதை நிறுத்தும் வரை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதில்லை என்றும் இந்தியா உறுதிபட தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.