ப்ளூடூத் எடை இயந்திரம்: ரேஷன் கடையில் தாமதமாகும் பொருள் விநியோகம்; மக்கள் கோபம் – கவனிக்குமா அரசு?

அந்தக் காலம், இந்தக் காலம்… எந்தக் காலமாக இருந்தாலும், ரேஷன் கடை என்றதும் நம் கண்முன்னே வந்து நிற்பது, ‘வரிசை… கூட்டம்’.

‘அதிக வெயில் இல்லாத நேரத்திலும், கூட்டம் அதிகமாக இல்லாமல் இருக்கும் நேரத்திலும் ரேஷன் கடைக்கு சென்று வந்துவிடலாம்’ – இது தான் பெரும்பாலான மக்களின் மனநிலை.

மக்களின் பிரச்னையைப் போக்குவது மாதிரி தான் அரசு தீர்வு கொண்டுவர வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு இப்போது கொண்டு வந்துள்ள ‘ப்ளூடூத் மின்னணு எடை இயந்திரம்’ இன்னும் சிக்கலை அதிகமாக்குவதாகத் தான் உள்ளது.

ரேஷன் கடை
ரேஷன் கடை

அமலுக்கு வந்த புதிய இயந்திரம்

கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி முதல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் ப்ளூடூத் மின்னணு எடை இயந்திரம் (PoS) கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, அன்று முதல் மக்களுக்கு ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருள்கள் இந்த இயந்திரத்தில் தான் எடைப் போடப்படுகிறது.

பில் போடும் கணினி ப்ளூடூத் வழியே எடை இயந்திரத்தோடு இணைக்கப்பட்டு, அந்த இயந்திரத்தில் போடப்படும் பொருள்களின் எடைக்கேற்ப கணினி பில் அப்டேட் ஆகும்.

ப்ளூடூத்தில் கணினியோடு இணைந்து பில் வர வேண்டும் என்பதால் ஒரு நபருக்கு பொருள்கள் வழங்கி முடிக்கவே, 8 – 10 நிமிடங்கள் ஆகிறது என்றும், இதனால், ஒரு நாளுக்கு 50 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே பொருட்கள் விநியோகிக்க முடிகின்றது என்றும் ரேஷன் கடை ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மக்களுக்கு கோபம்

அடுத்ததாக, பொருள் வாங்கியவர்களின் ரேகையை பதிவு செய்ய வேண்டும். அங்கேயும் கைரேகை பதிவு ஆகாமல் நீண்ட நேரம் பிடித்துவிடுகிறது.

இப்படி ஒருவருக்கே அதிக நேரம் பிடிக்கும்போது வரிசையில் பின் நிற்கும் மக்களுக்கு ரேஷன் கடை ஊழியர்களின் மீது அதிருப்தி ஏற்படுகிறது. இதனால், அவர்கள் மக்களின் கோபத்தை அதிகம் சந்திக்கின்றனர்.

இன்னொரு பக்கம், ப்ளூடூத் வழியே கணினி மற்றும் எடை இயந்திரம் இணைக்கப்பட்டுள்ளதால், சரியாக எடை இருந்தால் தான் பில் பிரிண்ட் ஆகும். அதனால், கணினி, எடை இயந்திரம் என மாறி மாறி ஒரே நேரத்தில் கவனிக்க வேண்டிய சூழ்நிலையும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு உருவாகி உள்ளது.

ரேஷன் கடை
ரேஷன் கடை

இந்தப் பிரச்னைகளின் தீர்வு குறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவரிடம் பேசினோம். அவர் கூறியதாவது…

“1000 குடும்ப அட்டைதாரர்கள் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் கட்டாயம் இரண்டு ஊழியர்கள் இருக்க வேண்டும். ஆனால், அது தமிழ்நாட்டின் அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைமுறையில் இருக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. குறைந்தபட்சம் கிராமப்புற ரேஷன் கடைகளில் இரண்டு ஊழியர்கள் இருப்பதில்லை. அனைத்து வேலையையுமே ஒரே ஊழியர் தான் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இதை தமிழ்நாடு அரசு சீக்கிரம் சரிசெய்ய வேண்டும்.

அடுத்ததாக, கணினி, எடை இயந்திரம் இரண்டையும் ஒரே நேரத்தில் கவனிக்க வேண்டும் என்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. இதை மாற்றி, முதலில் கணினியில் பில்லை அப்டேட் செய்த பிறகு, ப்ளூடூத் மின்னணு இயந்திரத்தில் பொருள்களைப் போட்டால் போதும் என்றிருந்தால் பிரச்னை இருக்காது.

நாங்கள் எங்கே போக?

இதில் உள்ள மற்றொரு சிக்கல் ‘எடை’. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து வரும் பெரும்பாலான பொருள்கள் சரியான எடையில் வருவதில்லை. பெரும்பாலும் ஒவ்வொரு சாக்குப்பையிலும் ஒரு கிலோ எடை அளவிலான பொருள் இருக்காது.

ஒரு சாக்குபையில் இருக்கும் பொருள்களின் எடை 50 கிலோ. சாக்குப்பையின் எடை 600 கிராம். பொருளோடு சேர்த்து சாக்குப்பையின் எடை 50 கிலோ 600 கிராமாக இருக்க வேண்டும்.

ஆனால் எங்களுக்கு வருவதோ கிட்டத்தட்ட 49 கிலோ 600 கிராம். எடை இயந்திரத்தில் சரியான எடை வைக்க வேண்டும். ஆனால், எங்களுக்கே பொருள் குறைந்து தான் வருகிறது. இந்த நிலையில், சரியான எடையை வைக்க நாங்கள் எங்கே போக?

ரேஷன் கடை
ரேஷன் கடை

உயர் அதிகாரிகளிடம் உள்ளூர் அதிகாரிகள்…

கைரேகை பதிவு செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். காரணம், வயதானவர்களுக்கு எளிதாக பதியாது. மேலும், சர்வர்களும் மிகவும் மெதுவாகத் தான் வேலை செய்கின்றன. சர்வர்களின் ஸ்பீடை அதிகரிக்க வேண்டும்.

‘இவ்வளவு பிரச்னைகள் இருக்கிறதே, உயர் அதிகாரிகளுக்கு தெரியாதா?’ என்ற கேள்வி எழலாம். உயர் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்விற்கு வருவார்கள். ஆனால், உள்ளூரில் இருக்கும் அதிகாரிகள் ‘ஃபெர்பெக்ட்’ ஆக இருக்கும் ஒரேயொரு ரேஷன் கடையை மட்டும் காட்டி வேலையை முடித்துவிடுவார்கள்.

மேலே சொல்லியிருக்கும் அனைத்து பிரச்னைகளையுமே எடுத்துகொண்டால், இவை அனைத்துமே ரேஷன் கடை ஊழியர்கள் மீது மக்களுக்கு கோபத்தை உண்டாக்குகிறது. ஆனால், எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப் பிரச்னைகளை தமிழ்நாடு அரசு சீக்கிரம் சரி செய்ய வேண்டும்”.

ஆர்பாட்டம்… வேலைநிறுத்தம்…

ப்ளூடூத் மின்னணு இயந்திரப் பிரச்னையை சீக்கிரம் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால், இந்த மாத இறுதியில் ஆர்பாட்டத்தையும், அடுத்த மாதம் 14-ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தையும் அறிவித்துள்ளது தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி, அனைத்து பணியாளர்கள் சங்கம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.