வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவு: இபிஎஸ் இரங்கல்

சென்னை: கோவை மாவட்டம் வால்பாறை (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல் கந்தசாமி (60) உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டாபாளையத்தைச் சேர்ந்தவர் டி.கே.அமுல் கந்தசாமி. இவர் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வால்பாறை (தனி) தொகுதியில் போட்டியிட்டு 13,165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவர் அதிமுகவில் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏ-க்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் இன்று காலை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். இதனிடையே இன்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் மறைவு குறித்து இபிஎஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.க. அமுல் கந்தசாமி உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் அமுல்கந்தசாமி, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர். அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.

அமுல் கந்தசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும். இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.