IND vs ENG 1st Test: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 471 ரன்கள் குவித்து ஆல்அவுட்டாகியுள்ளது. 430 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த இந்திய அணி கடைசி 6 விக்கெட்டுகளை 41 ரன்களுக்கு பறி கொடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த் 134 ரன்களுக்கு அவுட்டானார். அதேபோல் கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 147 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். டாப் ஆர்டரில் ஜெய்ஷ்வால் 101 ரன்களும் கேஎல் ராகுல் 42 ரன்களும் எடுத்தனர்.
பின் வரிசையில் இறங்கிய கருண் நாயர் டக் அவுட்டானார். அவர் மீது தான் எல்லோருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட கருண் நாயர் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் போல்ட் என்ற முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தார். இப்போட்டியில் சதமடிப்பார் என்றும் தெரிவித்திருந்தார். அதற்கு காரணம் இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி போட்டிகளில் விளையாடிய கருண் நாயர் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் விளாசினார். அதே பார்மை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் தொடருவார் என்ற நம்பிக்கையில் சவுரவ் கங்குலி இப்படி கூறியிருந்தார்.
ஆனால் அவரின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் கருண் நாயரின் ஆட்டம் அமைந்துவிட்டது. அதேபோல் பயிற்சி போட்டிகளில் அதிரடியாக விளையாடிய ஷர்துல் தாக்கூர் ஒரு ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். இங்கிலாந்து லெவன் மற்றும் இந்திய அணியின் இன்ட்ரா ஸ்குவாடு போட்டிகளில் சிறப்பாக விளையாடியதாலேயே அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை மீண்டும் வீணடித்திருக்கிறார் ஷர்துல். இவரும் கருண் நாயரும் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடிப்பது கடினம் தான்.
இப்போதைய சூழலில் இந்திய அணி பேட்டிங்கில் வலுவான ஸ்கோரையே எடுத்திருக்கிறது. இருப்பினும் 500 ரன்களைக் கடந்திருந்தால் இன்னும் கொஞ்சம் தைரியமாக இருந்திருக்கலாம். ஆனாலும் பரவாயில்லை. இப்போது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணி பேட்டிங் செய்து முடித்ததும் சிறிது நேரம் மழை பெய்தது. அதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் வானிலை சரியாகிவிட்டது. இங்கிலாந்து அணியில் பென் டக்கெட், ஜாக் கிராவ்லி ஓப்பனிங் இறங்கினர். அதில் ஜாக் கிராவ்லி விக்கெட்டை இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா வீழ்த்தினார். மழை காரணமாக மைதானத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் கொஞ்சம் இந்திய அணிக்கு சாதகமாக மாறியுள்ளது.