கோவை: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் இன்று கோவை வந்தார். பேரூரில் நாளை நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தார். கார் மூலமாக கோவைப்புதூர் அருகேயுள்ள சுண்டக்காமுத்தூர் நாச்சிகோனார் தோட்டத்திற்கு சென்றார். இரவு அங்கு தங்கும் அவர் நாளை காலை பேரூர் ஆதீன மடத்திற்கு சென்று அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
சிறப்பு பூஜையில் பங்கேற்ற பின், நொய்யல் ஆறு மற்றும் சமீபத்தில் திறக்கப்பட்ட தர்ப்பண மண்டபத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து மும்பைக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் வருகையை முன்னிட்டு கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் தலைமையில் மொத்தம் 263 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.