நெல்லை,
டி.என்.பி.எல். தொடரில் நெல்லையில் இன்று நடைபெற்று வரும் 18-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கோவை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜிதேந்திர குமார் 9 ரன்களிலும், அவரை தொடர்ந்து சச்சின் 10 ரன்களிலும், ஆண்ட்ரே சித்தார்த் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து அணியை தொடக்க ஆட்டக்காரர் ஆன சுரேஷ் லோகேஷ்வர் மீட்டெடுத்தார். தனி ஆளாக போராடிய அவருக்கு சிறிது நேரம் ஒத்துழைப்பு கொடுத்த ஷாருக்கான் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த குரு டக் அவுட்டிலும், மாதவ் பிரசாத் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் சுரேஷ் லோகேஷ்வர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோர் சவாலான நிலையை எட்ட உதவினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கோவை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் அடித்துள்ளது. நெல்லை தரப்பில் சோனு யாதவ் மற்றும் சச்சின் ரதி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி நெல்லை களமிறங்க உள்ளது.