ஹரியானாவில் இளம் பெண்ணை கொன்று வீட்டு முன் புதைத்த கணவர் குடும்பத்தினர்

ஹரியானாவில் 2 மாதங்களாக தேடப்பட்டு வந்த இளம் பெண்ணை, கணவர் குடும்பத்தினர் கொலை செய்து வீட்டு முன் புதைத்தை போலீஸ் விசாரணையில் மாமனார் ஒப்புக் கொண்டார். இதையடுத்து உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் ஃபிரோசாபாத் மாவட்டம் கேரா கிராமத்தை சேர்ந்த இளம் பெண் டானு ராஜ்புத்(25). இவருக்கும் ஹரியானா ஃபரிதாபாத்தைச் சேர்ந்த அருண் சிங் (28) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் டானு ராஜ்புத்தை காணவில்லை என போலீஸில் அவரது கணவர் அருண் சிங் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி புகார் அளித்தார். மனநிலை பாதிப்பில் இருந்த அவரை திடீரென காணவில்லை எனவும், அவர் காதலுடன் ஓடிப்போயிருக்கலாம் எனவும் போலீஸில் கணவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டை நம்ப மறுத்த டானு ராஜ்புத் பெற்றோர், தங்கள் மகளுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது என போலீஸாரிடம் கூறினர். இந்த வழக்கில் கடந்த 2 மாதங்களாக எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று அருண் சிங்கின் தந்தை பூப் சிங் (50) என்பவரை போலீஸார் விசாரைணைக்கு அழைத்துச் சென்று பல மணி நேரம் விசாரித்தனர். அப்போது ராஜ்புத்தை கொலை செய்து, அவரது உடலை வீட்டு முன் கழிவு நீரை உறிஞ்சுவதற்காக ஜேசிபி மூலம் ஏற்கெனவே தோண்டிவைக்கப்பட்டிருந்த ஆழமான குழியில் நள்ளிரவு நேரத்தில் புதைத்ததாக கூறினார்.

இதையடுத்து அவர்களது வீட்டின் முன் புறத்தில் 8 அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட டானு ராஜ்புத்தின் உடல் போலீஸார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. அவரது உடல் பிரதேச பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதன் முடிவுகள் அடுத்த வாரம் வெளியானபின்பு அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவரும். எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என அருண் சிங் குடும்பத்தினரிடம் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.