கொல்கத்தா: மேற்கு வங்க சட்டபேரவையில் இருந்து தீபக் பர்மன், சங்கர் கோஷ், அக்னிமித்ர பால் மற்றும் மனோஜ் ஓரான் ஆகிய நான்கு பாஜக எம்எல்ஏக்களை எஞ்சிய கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் பிமன் பானர்ஜி உத்தரவிட்டார். அவையில் முன்பு கூறப்பட்ட சில கருத்துகளை நீக்குவது தொடர்பான விவாதத்தின்போது இந்த எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சபாநாயகர் இந்த முடிவை எடுத்தார்.
இதுகுறித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் கூறுகையில், “ நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை பயன்படுத்தினோம். ஆனால், மார்ஷல்கள் வரவழைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டோம். எதிர்க்கட்சிகளின் குரல் சபைக்குள் தொடர்ந்து அடக்கப்படுகிறது” என்றனர்.
பாஜக தலைவவர் அமித் மாளவியா கூறுகையில், “ ஆளும் கட்சியின் அடக்குமுறையை தட்டிக்கேட்கும்போது எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் சட்டமன்ற நடைமுறைகளை தவறாக பயன்படுத்துகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது அரசு நியாயமற்ற முறையில் சர்வாதிகார தோரணையில் செயல்படுகிறது. மேற்கு வங்கம் அறிவிக்கப்படாத அவசரநிலையை எதிர்கொண்டுள்ளது” என்றார்.