புதுடெல்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் இருந்து ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ், 19 சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 4,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நடைபெற்றதை அடுத்து, அந்த இரு நாடுகளிலும் வசித்து வந்த இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மத்திய அரசு கடந்த 18-ம் தேதி ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கியது. இதுவரை 19 சிறப்பு விமானங்களில், 4,400-க்கும் மேற்பட்ட இந்தியர்களை இந்தியா மீட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானில் இருந்து வெளியேறி, ஆர்மீனிய தலைநகர் யெரெவனுக்கு வந்து சேர்ந்த 173 இந்தியர்கள் கொண்ட புதிய குழு, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் நேற்று (ஜூன் 26) இரவு டெல்லி வந்தடைந்ததாக வெளியுறவு அமைச்சகம் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “ஆபரேஷன் சிந்துவின் ஒரு பகுதியாக, 3 இந்திய போர் விமானங்கள் உட்பட 19 சிறப்பு விமானங்கள் மூலம் மொத்தம் 4415 இந்திய நாட்டினர் (ஈரானில் இருந்து 3597 பேர் மற்றும் இஸ்ரேலில் இருந்து 818 பேர்) இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். 9 நேபாள நாட்டினர், 4 இலங்கை நாட்டினர் மற்றும் ஒரு இந்திய நாட்டவரின் ஈரானிய மனைவி ஆகியோர் ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஈரானில் இருந்து இந்தியர்களை அழைத்து வர மொத்தம் 14 விமானங்களை நாங்கள் அனுப்பி வைத்தோம். இந்த விமானங்கள் மஷாத், ஆர்மீனியாவின் யெரவான் மற்றும் துர்க்மெனிஸ்தானில் உள்ள அஷ்காபாத் ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்டன. எகிப்து மற்றும் ஜோர்டான் அரசாங்கத்தின் ஆதரவுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இஸ்ரேல், ஜோர்டான் மற்றும் எகிப்தில் உள்ள இந்திய தூதரகங்கள் டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக தலைமையகத்துடன் மிகவும் நெருக்கமாக ஒத்துழைத்தன.
ஈரான் அரசாங்கத்திற்கும் நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். ஏனெனில், நமது நாட்டினரை வெளியேற்றுவதற்காக அவர்கள் தங்கள் வான்வெளியைத் திறந்தனர். இந்த சிறப்புச் செயலுக்கு ஈரான் அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். எங்கள் மக்களை வெளியேற்ற எங்களுக்கு உதவியதற்காக துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆர்மீனியா அரசாங்கங்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். ஈரான், இஸ்ரேலில் நிலவும் கள நிலைமையை மத்திய அரசு மதிப்பிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.